tamilnadu

img

தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் : டி.ஆர். பாலு பேச்சு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “ஒன்றிய அரசுக்கு முழுப் பெரும்பான்மை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், தீமைகளை அழிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்து விட்டது. 700 விவசாயிகள் தில்லியில் மாண்டு போயினர். இப்போதுவரை குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை. சர்வதேச சந்தையில் விலை குறைந்தும் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவோம், ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவோம் என்பது உள்ளிட்ட வேலைவாய்ப்பு,

நிதி ஒதுக்கீடு வாக்குறுதிகள் எதனையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.  குறிப்பாக, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. ரூ. 15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகின்ற ஒன்றிய அரசால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 2000 கோடி ஒதுக்க முடியவில்லை. கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செயல்படுத்தப்படவில்லை; 13வது திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வருவாயில் 20 சதவிகிதம் மட்டுமே திருப்பித் தரப்படுகிறது. சோனியா காந்தியும், கருணாநிதியும் தொடங்கி வைத்ததாலேயே சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு முடக்கி வைத்துவிட்டது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாண இழுத்துச் செல்லப்பட்டதுடன், பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் பெரும்பான்மை - சிறுபான்மையினர் மோதல் நடந்ததை போல மணிப்பூரிலும் நடைபெறுகிறது. மணிப்பூர் வன்முறைகளை ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலக நாடுகள் கண்டித்துள்ளன. குஜராத் வன்முறைகளின் போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ராஜதர்மத்தை பின்பற்றுமாறு கூறினார். அதையே நாங்களும் கூறுகிறோம். ஆனால்,  பிரதமர் மோடி அவைக்கே வருவதில்லை. எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்