tamilnadu

நீட் நுழைவுத் தேர்வுக்கட்டணத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மதுரை, அக். 4-  மருத்துவ முதுநிலை படிப்பிற்கான  நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கில், கட்டணத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ நீதிமன்றத்தால் இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறிவிட்டது. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது காதர் மீரா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், நான் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக  நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். நீட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வாணை யம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு கணினி மூலம் நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத்தேர்வு எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய கல்லூரிகளுக்குப் பொருந்தாது. மருத்துவ முதுநிலை நுழைவுத் தேர்வு தனியார் கணினி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனம் தான்  நீட், எய்ம்ஸ் என  தனித்தனியாக மருத்துவ முதுநிலை படிப்பிற் கான நுழைவுத்தேர்வை நடத்துகிறது. ஆனால் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை விட நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணம் அதிகம். இதன்  மூலம் தேசிய தேர்வாணையம் வருடத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது.  நீட்- முதுநிலை நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலர், தேசிய தேர்வாணையதிற்கு மனு அளித்துள்ளேன். எனவே நீட்-முதுநிலை நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை குறைக்க தேசிய தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீட் நுழைவுத் தேர்வு நடத்து வது தனிப்பட்ட அமைப்பு. தேர்வுக் கட்டண கணக்குகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்வுக் கட்டணதை குறைக்கவோ, கூட்டவோ நீதிமன்றத்தால் இயலாது எனக் கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.