நாப்கின்கள் சமன் செய்து விட்ட
அந்தக் கால மூன்று நாட்களை
அம்மா அடிக்கடி அசை போடுவாள்
வீட்டுக்கு தூரம் என
ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்த்தது
அசூயையாக இருந்தாலும் அம்மாவுக்கு அதுவும்
ஒரு சுதந்திரம் தான்
பின்கட்டில் பாயும் போர்வையும்
தட்டும் டம்ளரும் தனியாக!
மாமியாரோ.. நாத்தனாரோ..
தள்ளிநின்று கை தூக்கி
போடும்போது பிச்சைக்காரியாக
தட்டை ஏந்தி வாங்கிச் சாப்பிட
சங்கடமாக இருக்கும்
பிறகு எத்தனை நாள்தான்
நாமே சமையற்காரியாக இருப்பது
அவர்களும் ஆக்கிப் போடட்டும்
என்ற இறுமாப்புடனும்
விருந்துண்ண தயாராகும்
பாவனையுடனும் சமாளிப்பதில்
சந்தோசமும் இருக்கும்
பகலிலேயே இரவை இழுத்து
தலை வரை போர்த்தி
கனவுகள் கூடிய
உறக்கத்தை தேடுவதை
ஆட்சேபித்து யாரும் அதட்ட முடியாது
அக்கம்பக்க சிறு பிள்ளைகளுடன்
சிறுமியாய் சேர்ந்து
விரல் படாமல் பல்லாங்குழி
தாயக்கரம் விளையாடலாம்
விதவிதமான கதைகள் பேசலாம்
கல்கியும் ஜெயகாந்தனும்
ராஜம்கிருஷ்ணனும் சூடாமணியும்
உடனிருந்த உவப்பான உலகம் அது
நீண்ட காலத்திற்கு பிறகு
கொரோனா வந்ததில் அம்மாவுக்கு
ஒரு நல்லதும் நடந்தது
பதினைந்து நாட்கள்
ஹோம் க்வாரண்டைன்
மீண்டும் வீட்டுக்கு தூரம்!
வரத.இராஜமாணிக்கம்
பழநி