திருவள்ளூர், ஜூலை 17- ஒப்பந்த தொழிலாளர்கள் அடிமை களைப்போல் நடத்தப்படுகின்றனர் என்று சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டினார். ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூலை 16) மீஞ்சூரில் சிஐடியு சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அ.சவுந்தர ராசன் கலந்து கொண்டு பேசுகையில், தொழிற்சாலைகளில் ஒப்பந்த முறை யில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும், அவுட்சோர்சிங் மூலம் வேலை வாங்குவது என்கிற முறையில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மோசமான நடைமுறை உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களை எந்தெந்த இடத்தில் வைக்கலாம், எந்தெந்த வேலைகளை வாங்கலாம் எந்த வேலையை வாங்க கூடாது என்கிற விதி உள்ளது.
ஒப்பந்த முறை யில் வேலை வாங்க கூடாது என்கிற இடத்தில் வேலை கொடுப்பவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் சட்டத்தில் இருக்கிறது. இந்த சட்டத்தை மீறுகிறவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை கொடுக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்த பிறகும் கூட, நடைமுறையில் அவை பின்பற்றப் படுவதில்லை. மேலும் ஒப்பந்த முறை பெருகிக் கொண்டே வருகிறது. இப்போது ஒப்பந்த தொழிலாளர் களுக்கு சம்பளம் நிரந்தர தொழி லாளியை விட மிகவும் குறைவாக கொடுக்கப்படுகிறது. வேலை நேரம் என்பது வரையறை ஏதுமில்லை. தொழி லாளிக்கு எந்த மனித உரிமையும் மரியாதையும் கொடுக்கப்படு வதில்லை. கேண்டீன் வசதி கூட சரிசமமாக இல்லை, போக்குவரத்து வசதி இல்லை. நவீன அடிமைத் தனத்தை அங்கு பார்க்க முடிகிறது. கொத்தடிமைபோல் நடத்தப்படும் அந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் ஒரே தன்மையுள்ள வேலையை செய்யக் கூடியவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஆட்சியா ளர்களை பொறுத்தவரையில் தொழி லாளர் சட்டங்களை நீர்த்துப்போக கூடிய அளவிலேயே தான் சட்ட திருத்தங்களை கொண்டு வருகின்ற னர்.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அரசாங்கம், அதன் அதிகாரியான தொழிலாளர் ஆய்வாளர் (லேபர் இன்ஸ்பெக்டர்), அக்கறை காட்ட வில்லை. பெரும்பாலும் முதலாளிகள் பக்கமே நிற்கிறார்கள். எப்படி ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மீஞ்சூர் அருகில் துறைமுகம், மின் நிலையம் இருக்கிறது. அதை சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. துறைமுகம், மின்சாரம் இவைகள் தாய் தொழில்கள். இதில் பணியாற்றக் கூடியவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அந்த ஊழியர்களுக்கும் ரூ.500, 400 என குறைந்த கூலி கொடுத்து தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். மீஞ்சூர் பகுதியில் தொழிற்சாலை களின் வருகையை யொட்டி, மீன் வளம் குறைந்து விட்டது. மீன் பிடித் தொழிலை இழந்த மீனவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடந்தப்பட்டன. அரசு வேலை கொடுத்தாலும் அதற்கேற்ப நியாயமான கூலி வழங்கப்படுவ தில்லை. தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு என்பதை முன்னிலைபடுத்தி, அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுக்க உள்ளோம். அதற்கான துவக்கம் தான் இந்த கருத்தரங்கம் என்றார். முன்னதாக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ். லெனின் சுந்தர், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தயாளன், திருவள்ளூர் மாவட்டப் பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.நரேஷ்குமார், ஒப்பந்த தொழிலாளர்கள் சதீஷ், சுசிலா, பரந்தாமன், கோவிந்தம்மாள், பிரபாகரன், பிரகாஷ், கனகராஜ் ஆகியோர் பேசினர். இந்த கருத்தரங்கில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.