tamilnadu

img

மலைக் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி சேதம்

மலைக் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி சேதம்

உதகையில் இரவு - பகலாக கொட்டித் தீர்க்கும் மழை

உதகை, மே 29 - உதகையில் இரவு - பகலாக, கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக்காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் கடந்த ஐந்து நாட்களாக அதிகனமழையை எதிர்கொண்டு வருகிறது. உதகை, அவலாஞ்சி, எமரால்டு, இத்தலார், நஞ்சநாடு, கப்பதொரை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது அறுவடைக்கும் தயாராக உள்ளன. இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் அதிகனமழை காரணமாக பல இடங்களில் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  தண்ணீரை வடிக்க முடியாத வகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் அழுகி பெரும் சேதத்தைத் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. மே 30 வரை அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், மலைதோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  அவர்கள், சேதத்தைத் தவிர்க்க, அதிகனமழைக்கு இடையேயும், மலைக் காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வால்பாறை தொழிலாளர்கள் வேலையிழப்பு கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து உள்ளது. நகரப்பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 85.8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக வால்பாறை சின்ன கல்லாறில் 11.9 செ.மீ., பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 11.3 செ.மீ., சிங்கோனாவில் 9 செ.மீ., சோலையாறு பகுதியில் 8.7 செ.மீ மழை பதிவானது. வியாழக்கிழமையும் காலை முதல் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், நரசிபுரம், மதுக்கரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.  மாநகரில் உக்கடம், ஆத்துப்பாலம், காந்திபுரம், ரயில் நிலையம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல் நொய்யல் ஆற்றில் இரு கரைகளை தொட்டுவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலையின்றி கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், அரசு இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.