சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற கல்வி பாதுகாப்பு மாநாட்டில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து உரையாற்றினார். இம்மாநாட்டிற்கு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேரா.ஜெ.காந்தி ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் தொடக்கவுரையாற்றினார். சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, கல்வியாளர் பேரா அ.கருணானந்தம், முனைவர் அந்தோணி ராபின்சன், கல்வியாளர் ஆயிஷா நடராஜன், பொருளாதார அறிஞர் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.டெய்சி நன்றி கூறினார். ஏசு சபை கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான் கென்னடி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தேசிய கல்விக் கொள்கையை (2020) திரும்ப பெற வலியுறுத்தி ஞாயிறன்று (அக்.15) சென்னையில், 36 அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ஜனநாயக கல்விப் பாதுகாப்பு கூட்டியக்கம் நடத்திய மாநாட்டில், கேரள மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஆற்றிய உரையின் பகுதிகள்:
ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை, கல்விக்கொள்கை என்று கூறுவதை விட முக்கியமான விஷயங்களில் இருந்து விலகி ஓடும் கொள்கை என்ற தான் கூறவேண்டும். பொது வாக ஒரு கல்விக்கொள்கையை புதிதாக உருவாக்கும் முன்பு ஏற்கனவே கடை பிடிக்கப்பட்ட கல்விக்கொள்கையின் விளைவுகளை ஆராய்ந்திருக்க வேண்டும். அதை ஒன்றிய அரசு செய்ய வில்லை. ஏற்கனவே இருந்த கொள்கை யில் எது தேவையற்றது, எது தேவை யானது; எது நீக்கப்படவேண்டும் என்று ஆராய்ந்திருக்கவேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. மிக முக்கிய மான விஷயங்கள் குறித்து புதிய தேசிய கல்விக்கொள்கை மவுனம் சாதிக்கிறது. இந்த கொள்கையை அமல்படுத்தும் முன்பு மாநில சட்டமன்றங்களில் அல்லது சமூக மன்றங்களில் ஆய்வுக்கு உட்படுத்த வில்லை. புதிய கொள்கையில் பெரும்பாலும் பழமையான இந்தியாவை புகழும் பகுதி கள் அதிகமாக உள்ளன. அவர்கள் கூறும் பொற்கால ஆட்சி எப்படி இருந்தது? பெரும்பாலான மக்கள் அறியாமை என்ற இருளில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பெண்கள், சூத்திரர்கள் கல்வி கற்றால் அவர்களது காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவதை தண்டனையாக வைத்திருந்த னர். இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தோ மதச்சார்பின்மையின் மதிப்பு குறித்தோ புதிய தேசிய கல்விக்கொள்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.
முற்றிலும் வணிகமயமாக்கும் கொள்கை
கல்வியை நுகர்பொருளாக மாற்று வதற்கான ஆலோசனைகள் அதிகமாக உள்ளன. கல்வியை வணிகமயமாக்கவும் மத ரீதியிலான கல்வியை வழங்கவும் தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது. தரமான கல்வி என்பது சுயநிதி கல்வி நிறுவனங்களில் தான் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க இந்த கொள்கை முயற்சிக்கிறது. நாட்டின் சொத்து என்று கருதப்படும் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது பாஜக அரசின் கல்விக் கொள்கை. சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடர்ந்து வழங்கவேண்டிய அவசியம் குறித்து இந்த கொள்கை அமைதி காக்கிறது. உயர்கல்வியை பரவலாக்குவதற்கு பதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை புதிய தேசிய கல்விக்கொள்கை ஏற்படுத்தப் பார்க்கிறது. கல்லூரிகளை பல்கலைக் கழகத்து டன் இணைப்பதைத் தவிர்ப்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறிய நிலை யில் உள்ள பிரிவினரை உயர்கல்வியில் இருந்து விலக்கி வைக்கவே பயன்படும். அனைத்துக் கல்லூரிகளையும் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் என்று புதிய கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தன்னாட்சியைத் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோரி வருகின்றன. அதாவது நிர்வாகம் மற்றும் நிதி விஷயத்தில் தன்னாட்சி என்றால் சாமானிய குடும்பத்தை சேர்ந்த மாணவருக்கு உயர்கல்வி எட்டாமல் போய்விடும்.
வழிகாட்டும் கேரள அரசு
இவற்றுக்கு மாற்றாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையை வலுவாக்க அரசே நிதி ஒதுக்குகிறது. அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக் கூடங்களை ஏற்படுத்த அரசு அதிகளவில் நிதியை செலவழிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய துறைகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஆண்டுக்கு 500 மாணவர்களுக்கு முனைவர் பட்டத்திற்கு அரசே நிதியுதவி செய்கிறது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளை அரசே ஊக்குவிக்கிறது. பெண்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படு கிறது. அதற்கேற்ற சூழலையும் வசதி களையும் அரசே ஏற்படுத்தித் தருகிறது. இதற்கு ஏற்ப நாங்கள் மாநில பாடத் திட்டத்தை மாற்றி வருகிறோம். எனவே ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மாணவர்கள் ஆசிரியர்களின் உரிமை களை நிலைநாட்டவும் கூட்டாகப் போராட வேண்டும். நமது நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டவும் தொடர்ந்து போராடுவோம்.