tamilnadu

img

100 நாள் தொழிலாளரை வஞ்சிக்கும் மோடி அரசு

தமிழ்நாட்டில் சுமார் 93 லட்சம் தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொழிலா ளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய ரூ.8,100 கோடியை இன்னும் கொடுக்கவில்லை. தீபாவளிப்பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. மோடி அர சோ, 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. ஒரு தொழிலாளி வாரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.1,200 கூலியாகப் பெறுவதாக வைத்துக்கொண்டால் நான்கு வாரத்திற்கு ரூ.4,800-ஐ கூலி யாகப் பெறுவார். இந்தக் குறைந்தபட்சத் தொகை கிடைத்தால் தொழிலாளி தனது குடும்பச் செலவுகளை சமாளிப்பார். ஆனால், ஒன்றிய மோடி அரசு தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.8,100 கோடியை இன்னும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது.  தமிழகம் முழுவதும் பணியாற்றும் சுமார் 93 லட்சம் தொழிலாளர்களின் தீபாவளி கொண்டாட்டத்தில் மண் அள்ளிப் போடும் நடவடிக்கையாகவே பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.

நவ.3-இல் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் ஒன்பது வாரங்கள் முதல் பத்து வாரங்கள் வரை சம்பளம் வழங் கப்படவில்லை.  மாவட்டத்தில் 3,23,875 குடும்பங்களைச் சேர்ந்த 4,05,337 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர், 2023-2024-ஆம் ஆண்டில் இது நாள் வரை  2,52,043 குடும்பங்களைச் சேர்ந்த  2,76,443 பேருக்கு பணி வழங்கப்பட்டுள் ளது. இவர்களில் 100 நாள் பணி முடித்த நபர்கள் 1,813. இதுவரை பணி புரிந்துள்ள மாற்றுத்திறனாளிகள் 4,205. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்க ளோ தங்களிடம் பணம் ஏதுமில்லை. ஒன்றிய அரசு பணத்தை விடுவித்தால் அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கும் ஊதியம் சென்றுவிடுமென உறுதியளித்துள் ளதாகத் தெரிவிக்கிறார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன். மேலும் அவர் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் சம்பளம் போட மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நவ.3-ஆம் தேதி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் மாதர் சங்கமும் இணைந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டத்தில் மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசனும் பங்கேற்கிறார் என்றார்.

மூன்று மாத பாக்கி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்க ளாக ஊதியம் வழங்காததால் எப்படி தீபாவளியைக் கொண்டாடுவது எனத்தெரியாமல் திகைத்து நிற் கின்றனர். மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 404 வருவாய் கிராமங்களில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கிராமப்புறங்களில் சுமார் 4.61 லட்சம் பேர் 100 நாட்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.  மாவட்டத்தில் உள்ள அந்தந்த கிராமங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.22 கோடி ஊதியம், வியாழன்தோறும் மத்திய நோடல் (கணக்கு)  அதிகாரி மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. குறிப்பாக மணிகண்டம், தாத்தை யங்கார்பேட்டை, முசிறி, தொட்டியம், அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப் படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தி லுள்ள தொழிலாளி ஒருவர் கூறுகை யில், “எனக்கு ஒவ்வொரு வாரமும் கூலி யாக ரூ.1,600 கிடைக்கிறது. குடும்பச் செலவுகளைக் கவனித்தாலே போதும். ஆனால், எனக்குக் கூலி கிடைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஊதியம் வரவு வைக்கப் பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வங்கிக்கு அலைந்து கொண்டி ருக்கிறேன். ஆனால், காசு வந்து சேர்ந்தபாடில்லை என்கிறார். அவரது கூற்றுப்படி உத்தமசீலி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழி லாளர்கள் சம்பளமின்றி தவிக்கி றார்கள். மூன்று மாதங்களாக சம்பளமில்லா மல் காத்திருக்கும் தொழிலாளர்கள் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகளை சந்தித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்தப் பிரச்சனை சுமார் 12 வாரங்களாக நீடிப்பதாகத் தெரிவித்தார். மத்திய கணக்கிலிருந்து ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும். இப்பிரச்சனையை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நான்கு மாதங்கள் 

பெரம்பலூர் மாவட்டத்தில்  வேப்பந்தட்டை, வேப்பூர், ஆனந்தூர் உட்பட நான்கு தாலுகாக்களில் கடந்த நான்கு மாதங்களாக தொழிலா ளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. கிட்டத்தட்ட சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து வாரங்கள் முதல் ஆறு வாரங்கள் வரை சம்பளம் வழங்கவில்லை. இதனை நம்பி மட்டும் சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என்றார் விதொச மாவட்டச் செயலாளர் கணேசன். தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை சம்பளம் வழங்கவில்லை. இதை நம்பி சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறார் விதொச மாவட்டச் செயலாளர் கு.ரவீந்திரன். அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் முதல் இரண்டு மாதம் வரை சம்பளம் கிடைக்கவில்லை என்றார் விதொச மாவட்டச் செயலாளர் சக்திவேல்.