சென்னை, பிப். 12- இந்திய சமூகத்தை கல்வி அறிவுள்ள சமூகமாக மாற்ற உறுதி ஏற்போம் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஒரே மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதை முன்வைத்து இஸ்லாமிய மாணவிகள் பயன்படுத்தும் `ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா கும்பல் பாஜக அரசின் ஆதரவோடு பள்ளி கல்லூரிகளில் சிறுபான்மை மக்களை கல்வி நிலையத்திற்குள் நுழைய விடாமல் விரட்டியடிக்கும் செயலை சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கல்வி என்பது கண்டறிந்த உண்மைகளை, சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை, விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கற்றுணர்ந்து பிரபஞ்சத்தில் மனித சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் முறையாகும். ஆனால் இந்துத்துவா சக்திகள் கல்வியில் அறியாமையும், மூடநம்பிக்கைகளையும், காட்டுமிராண்டித்தனத் தையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றனர். சமூகம் மேம்பட ஆய்வு முயற்சியோடு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய கல்வி வளாகத்தை சிதைத்து வரலாற்றை பின்நோக்கி திருப்ப இந்துத்துவா சக்திகள் எடுக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வி ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். இந்த மேம்பட்ட செயல்களுக்கு மாணவர்கள் வாழும் நிலைகள், சமூக, குடும்ப பின்னணி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக நம்முடைய அறிவு சார்ந்த முன்னோர்களால் உருவாக்கப்பட்டதுதான் (யூனிஃபார்ம்) ஒரே ஆடை முறை. ஏழை- பணக்காரன் என்கிற பாகுபாட்டை, மேலாதிக்க சாதிய உணர்வை உடைக்க உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் முறை. இன்றைக்கு இந்துத்துவா சக்திகளால், அடிப்படைவாதிகளால் ஆதிக்க உணர்வை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
ஒற்றை கலாச்சாரம், ஒற்றை அரசியலமைப்பு சட்டம், ஒற்றை உணவு முறை, ஒற்றை உடை என இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதை நோக்கமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கால் பதித்து கலவரம் செய்து வரும் இந்துத்துவா வெறி கும்பல், தென்மாநிலங்களில் எப்படியாவது புகுந்து மக்களை மத ரீதியாக பிரித்தாள வேண்டும் என முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதிதான் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலையில் துவங்கி இன்றைக்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கி கலவரம் நடத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
கர்நாடக மாநில பள்ளி கல்லூரிகளுக்கு வருகை புரியும் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம் மாணவிகளை ``ஹிஜாப் அணிவதை தடுக்கும் நோக்கத்தோடு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்துவா சக்திகளை பொறுத்தளவில் சாதாரண ஏழை எளியவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு கல்வியறிவே கிடைத்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். இந்திய மாணவர் சங்கம், அம்பேத்கர் மாணவர் அமைப்புகளும் வெறியூட்டப்பட்ட இந்துத்துவா கும்பலை எதிர்த்து நேரில் நின்று போராடி வருகின்றனர். அதன் அடையாளம்தான் முஸ்லிம் மாணவியின் வீரம் செறிந்த செயலாகும். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாணவிகளையும் வெறியூட்டப்பட்ட இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நேருக்குநேர் நின்று குரல் கொடுத்து போராடி வரும் மாணவ இயக்கங்களையும் பாராட்டுகிறது, ஆதரவு தெரிவிக்கிறது.
இந்திய சமூகம் முழுமையான கல்வி பெற்ற சமூகமாக அமைந்திட வேண்டும் என்ற கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்களின் எண்ண ஓட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இருக்கிறது. கல்வி உரிமையை மறுப்பதற்கு எவ்வளவு கூர்மையான ஆயுதங்களோடு இந்துத்துவா கும்பல் வந்தாலும் ஒன்றுபட்டு எதிர்த்து நின்று இந்திய சமூகத்தை கல்வி அறிவுள்ள சமூகமாக மாற்ற உறுதி ஏற்போம். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் கல்வி வளாக அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். தமிழகத்தில் இதுபோன்ற ஆபத்துகள் வராமல் தடுக்கவும், கர்நாடகத்தில் நடந்துவரும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களை முறியடிக்கவும் அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.