நகைக்கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அறிவிப்பு
சென்னை, மே 29 - தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த விதிமுறைகள் அனைத்தும், சமானிய மற்றும் நடுத்தர மக்கள் எளிதில் நகைக்கடன் பெற முடியாத வகையில் இருந்ததுடன், வங்கியை நோக்கி வரும் மக்களை, வங்கி நிர்வாகமே தனியார் மற்றும் கந்து வட்டிக்காரர்களை நோக்கி தள்ளிவிடுவதாக இருந்தது. இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள் நலனுக்கு எதிரான விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலமாகவும், நிபந்தனைகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரிலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துறைரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன் பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நகைக்கடன் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது. தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை. அதனால் ஒன்றிய அரசு கொண்டு வரும் நகைக்கடன் புதிய விதிமுறைகளும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” என்று கூறியுள்ளார். “தமிழகத்தில் நடப்பாண்டு பயிர்க்கடன் வழங்க 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டும் அல்லாமல் புதிதாக கால்நடைகள் வாங்கவும் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
சென்னை, மே 29 - வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வியாழனன்று காலை 11 மணியளவில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசம் - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளது. இதையொட்டி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 நாட்களில் 10 அடி உயர்ந்த பெரியாறு அணை
தேனி, மே 29 - தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தது. 114 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் மட்டும் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. வியாழனன்று காலை அணையின் நீர்மட்டம் 124.75 அடியாக இருந்தது.