சென்னை, மே 31- தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைப் பொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, பிரிவு 24(1)-ன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் 1987ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாகும்.
தமிழகத்தில் 27 விற்பனைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு விற்பனைக்குழுவும் குறிப்பிட்ட அறிவிக்கை செய்து விளை பொருட்களின் விற்பனையை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் விளையும் விளைப்பொருட்களை அடுத்த மாவட்டத்தில் விற்பனை செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வகையான வேளாண் விளை பொருட்களின் விற்பனையினை ஒரே சீரான முறையில் பரிவர்த்தனை செய்யும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுத்தார். இதைத்தான் மே 25 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
அரசின் இந்த நடவடிக்கைகளினால், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை மாநிலத்தில் எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் பெற இயலும். மேலும், வியாபாரிகளிடையே வேளாண் விளை பொருட்கள் வர்த்தகம் செய்வதில் ஆர்வமும் பங்களிப்பும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பது நிச்சயமாகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கும், ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்ப டும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக 1936ஆம் ஆண்டிலிருந்தே வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதிதான நடைமுறை அல்ல. இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் உள்ளது. அடுத்து, 40 வேளாண் விளைபொருட்களுக்கு மட்டுமே இப்போதும் வரி வசூலிக்கப்படுகிறது. புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை.
மேலும், விவசாயிகளுக்கு உரிய விலையும் உடனடிப் பணமும் கிடைக்கும் வகையில், மின்னணு வர்த்தகம் போன்ற பல்வேறு சரத்துக்களை 1987ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரவின்பேரில் தற்போதைய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளரின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறது. மேலும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது இந்நிலையில், கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.