புதுதில்லி, ஜூலை 22- சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மேலும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்ட இலவச இணைப்புகளின் எண்ணிக்கை விபரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் தெலி, அளித்த பதில் வருமாறு:
“சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2018இல் 22 கோடியே 43 லட்சமாகவும், 2019இல் 26 கோடியே 54 லட்சமாகவும், 2020இல் 27 கோடியே 87 லட்சமாகவும், 2021இல் 28 கோடியே 95 லட்சமாகவும், 2022இல் 30 கோடியே 53 லட்சமாகவும் இருந்திருக்கிறது. ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைப்புத்தொகை இல்லாமல் வழங்குவதற்காக பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எட்டு கோடி இணைப்புகள் வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அது 2019இல் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களோடு கூடுதலாக இலவச முதல் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு இத்திட்டப் பயனாளிகளுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை 14.2 கிலோ கிராமம் எடையுள்ள ஒரு சிலிண்டருக்கு 200/- ரூபாய் வீதம் மானியம் அறிவித்துள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2022 ஜூன் 30 வரை இத்திட்ட பயனாளிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் 116 கோடியே 9 லட்சம் சிலிண்டர்களை வழங்கியுள்ளன.” (ந.நி.)