tamilnadu

நேரக்கட்டுப்பாடுகள்: விலக்களிக்க வணிகர் பேரமைப்பு கோரிக்கை

சென்னை, ஜன. 5- கொரோனா கால நேரக்கட்டுப்பாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்  தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றின் உருமாரிய ஒமைக்ரான் தொற்று பரவல், வேகமெடுத்ததன்  விளைவாக தமிழக முதல்வர், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுனர்களோடு கலந்தாய்வு செய்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிக்க இருப்பதை வணிகர் பேரமைப்பு  வரவேற்கிறது.   ஆனால் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை கொண்டுவந்தால் வாடிக்கையாளர்கள் கூட்டத்தை பெருக்கவே வழிவகுக்கும்.

எனவே தமிழக முதல்வர் இக்கருத்தை கவனத்தில் கொண்டு, நேரக்கட்டுப்பாடுகளை அறிவிப்பதற்கு முன் வணிகர்  சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பொது மக்களும் வணிகர்களும் பாதித்திடாத வகையில் பாதுகாப்பான நடைமுறைகளையும், கட்டுப்பாடு களையும் கையாள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது. அதே நேரத்தில் அனைத்து வணிகர்களும் நோய் தொற்றால் தாங்களும் பாதிக்கப்படா மல், வாடிக்கையாளர்களும் பாதித்துவிடாமல் இருப்பதற்கான தமிழக அரசின் வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் அவசியம் கடைபிடித்து, மீண்டும் ஒரு பொது முடக்கம் அறிவிப்பதை தவிர்த்து, வணிகத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வணிகர்களும், வணிக நிறுவன ஊழியர்களும், மேலும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்  கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை முன்வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.