tamilnadu

img

ஈரோட்டில் அம்பேத்கர் சிலை திறப்பு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு

ஈரோடு, ஜன.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாடு கடந்த 2021 டிசம்பர்,15,16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஈரோடு நகரத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரை அண்மையில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தோம். இதேபோல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இக்கோரிக்கைகளை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இச்சூழலில் குடியரசு தினமான ஜன.26 ஆம் தேதியன்று மதியம் 1 மணியளவில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அண்ணா, பெரியார், கலைஞர் சிலைகளுக்கு அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்துள்ளார். ஈரோடு மக்களின் கோரிக்கையை ஏற்று ஈரோடு நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்து, அதனை திறந்து வைத்த முதல்வருக்கும், இக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக ஆணை பெற முன்முயற்சி எடுத்த  வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கும் ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.