tamilnadu

img

ஏழ்மையிலும் ஜொலித்த ‘தங்கங்கள்’! - - சி.ஸ்ரீராமுலு

விளையாட்டுத் துறையில்‌ கிராமப்புற இளைஞர்கள் பல தடைகளை  தகர்த்தெறிந்துதான் முன்னேற வேண்டியுள்ளது. திறமை  இருந்தும் வசதி இல்லாமல் பலர் உச்சத்தை அடைய போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் போராடி மாவட்டம், மாநிலம் என்று சென்றாலும் தேசிய அளவில்   செல்லும் பொழுது பொருளாதார சூழல் தடை கற்களாக நிற்கிறது. இதனால் இவர்களுக்கு விளையாட்டு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இப்படியாக பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய அளவில் கிராமத்து இளைஞர்கள் விளையாடுவதும் பதக்கங்களை குவிப்பதும் மிகப்பெரிய ஆச்சரியமாகும். இந்தியாவின் கவுரவமிக்க விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று தேசிய விளையாட்டுப்  போட்டிகள். இது இந்தியாவின் நவீன ஒலிம்பிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டின்  வடிவத்தில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.  ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, குஜராத் மாநிலத்தில் நான்கு நாட்கள் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற தமிழக கிராமப்புற வீரர்கள் பலரும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

வறுமையும்-வலிமையும்!

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஆரோக்கிய அலிஸ் பளுதூக்கும் வீராங்கனை. தேசிய போட்டியிலும் தங்கபதக்கம் அறுவடை  செய்தார். வறுமையின் காரணமாக கபடி விளையாடி வந்த இவரை, பளுதூக்கும் வீராங்கனையாக‌ அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, போட்டிக்கு செல்ல பணமின்றி தவித்தபோது தனது தங்க நகைகளை அடகுவைத்தும் பணம் கொடுத்து தன்னம்பிக்கையை கொடுத்தவர் அவரது பயிற்சியாளர். அணுமின் நிலைய  நகரமான கூடங்குளம்தான் அவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து குடும்பத்தின் பசியை போக்கி வந்த நிலையில் தந்தை ராமச்சந்திர பாண்டியின் மரணம், அந்த குடும்பத்தை நிலைகுலையச் செய்தது. வேலைக்கு சென்ற தாய்தான் குடும்ப பாரத்தை சுமந்தார். வறுமையின் பிடியில் இருந்து மீள முடியாமல், படிப்பும் தடைபட்டுவிடுமோ என்ற கவலையில் சோர்ந்து போயிருந்த அலிஸ் இன்றைக்கு உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் வலிமை கொண்டவராக மாற்றி இருக்கிறார். திருவாரூர் மாவட்டம், செட்டி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரவேல். இவர் கபடி வீரராக  வலம் வந்தும் பெரிதாக பேசப்படவில்லை. தந்தையை போல் விளையாட்டில் ஆர்வமாய் களம் இறங்கிய அவரது மகன் பிரவீன், மும்முறை தாண்டும் (ட்ரிபிள் ஜம்ப்) இளையோர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவின் பெயரையும் பதக்க பட்டியலில் பதிவு செய்தார்.தடகளத்திலும் ஆதிக்கம்‌ செலுத்தி வரும் பிரவீன்,  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் உலக தடகளச் சாம்பியன், காமன்வெல்த் போட்டிகளுக்கும் தகுதி பெற்றார். அதே வேகத்தில், களம் இறங்கிய 21 வயதாகும் பிரவீன், மேலும்‌ ஒரு புதிய சாதனையுடன் தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம்வென்று பட்டையை கிளப்பினார். ஆனாலும் அவரது குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை.

தூத்துக்குடி மாவட்டம், முதலூவர் கிராமத்தை சேர்ந்த ஜோசப் ஆபிரகாம் மஸ்கோத் அல்வா தயாரிப்பதில் உலகப் பிரசித்தி பெற்றவர். அந்த குடும்பத்தில் பிறந்த ஜெஸ்வின் ஆல்டர் நீளம் தாண்டும் விளையாட்டுப் போட்டியில் தனி முத்திரை பதித்து வருகிறார். 20 வயதாகும் ஜெஸ்வின் ஆல்டர் 8.26 மீட்டர் தூரத்திற்கு தாண்டி புதிய சாதனையுடன் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று உலக தடகளத்திற்கும் தகுதி பெற்றார். தனது இந்த அசுரத்தனமான வெற்றிக்கு பின்னால், இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் என்ற கியூபாவின் பெட்டான் பயிற்சியே காரணம் என்றும் பெருமிதம் கொள்கிறார். கோவை, ஈச்சனாரியை சேர்ந்த வித்யாவின் குடும்பம் ஏழைக் குடும்பம். அரசு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற அவர், 400 மீட்டர் ஓட்டம்,  தடை  ஓட்டம், தொடர் ஓட்டங்களில் தொடர்ந்து பதக்கம் வென்று ஜொலித்து வருகிறார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியையின் ஊக்கமும் அரசு கொடுத்த பயிற்சியும் தேசிய விளையாட்டில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று கொடுத்தது.  இவரைப் போலவே வறுமையின் பின்னணியில் வளர்ந்து வரும் திவ்யா, வித்யா ராம்ராஜ், ஒலிம்பிக் வீராங்கனை சுபா வெங்கடேசன் ஆகியோர் உள்ளடக்கிய தமிழக அணி தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று வறுமையின் வலிமையை நிரூபித்தனர்.

மனதில் நின்ற மல்லர்

உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் பழம் பெருமைகள் இன்றும் போற்றப்படுகிறது. அதில், மல்லர் கம்பம் விளையாட்டை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க அறிமுகமான தேசிய விளையாட்டின் முதல் தங்கத்தை  ஆண்கள் பிரிவில் விழுப்புரம் ஹேமச்சந்தின் தட்டி வந்தார். பெண்கள் பிரிவில் சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்றார்.

தடம் பதித்த முத்துக்கள்...

தஞ்சாவூரை சேர்ந்தவர் இசை ஆசிரியர் பால்ராஜ் மகள் ரோஸி மீனா. 25 வயதாகும் இவரது உயரம் ஒரு போல் வால்டருக்கு (கம்பு ஊன்றி உயரம் தாண்டுபவருக்கு) போதுமானதல்ல. ஆனாலும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்பதால் அது ஒரு தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நம்பிக்கையுடன் கம்பை எடுத்த குறுகிய காலத்திலேயே பட்டை தீட்டிக் கொண்ட ரோஸி மீனா, முதன் முதலாக பங்கேற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 4.20 மீட்டர் உயரம் தாண்டி 8 ஆண்டுகால சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை தட்டி வந்த அவரது விடாமுயற்சியும், மன உறுதியும் ஒலிம்பிக்கி லும் பதக்கம் வென்று கொடுப்பார் என்கிற நம்பிக்கை ஒளி கீற்று வீசுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிறந்து, யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்று பதக்கங்களை அள்ளி வரும் கல்லூரி மாணவி வைஷ்ணவி, தேசிய விளையாட்டின் அறிமுக ‘யோகாவில்’ முதலிடம் பிடித்து  தங்கத்திற்கு முத்தமிட்டு கலக்கினார்.

சென்னையைச் சேர்ந்த பவானி தேவி வால் வீச்சு போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றிருந்தாலும் தேசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது முறையாக தங்கம் வென்று ‘ஹாட்ரிக்’ அடித்தார்.  சர்வதேச அளவில் நாட்டுக்காக தொடர்ந்து பதக்கங்களை குவித்து கொடுத்து ஸ்குவாஷ் விளையாட்டின் புதிய அடையாளமாக உருவான சுனைனா குருவில்லா, பூர்வீகம் கேரள மாநிலம் என்றாலும் அவர் பிறந்தது வளர்ந்தது அனைத்தும் சென்னை தான். தமிழ்நாட்டிற்காக விளையாடி வரும் இவர், தேசிய விளையாட்டில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார். தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் முன்னணி வீராங்கனை டி சில்வாவை தோற்கடித்து இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அர்ச்சனா சசீந்திரன், அதே ஆண்டில் உலக தடகள சாம்பியன் பட்டத்தை வென்றார்.  தேசிய விளையாட்டில் இந்தியாவின் தடகள நட்சத்திரம் அசாம் மாநிலத்தின் `ஹிமாதாசுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்த அர்ச்சனா முதலிடத்தையும் பிடித்து தமிழகத்திற்கு தங்கம் வென்று அசத்தினார். 400 மீட்டர் ஓட்டத்தில் சந்தோஷ், நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ட்ரெய்லதான் போட்டியில் எஸ். ஆர்த்தி, கூடைப்பந்தில் ஆண்கள் அணியும் ‘கோல்ட் மெடல்’ அடித்து விடா முயற்சி, தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.