tamilnadu

img

பாலர் - மா மரம் பாலர்

ஒரு பெரிய  வீட்டிற்குப்  பின்னால் மா மரம் இருந்தது. அந்த மரம் மிகவும் வயதானது.  அதன் கிளைகள் அங்கும் இங்கும் பரவி இருந்தன.  அடுத்த வீட்டின் மதில் சுவரைத் தாண்டிச் சென்றன.  பருவம் தவறாமல் பூ பூக்கும்.  வருடம் தவறாமல் மாங்காய்கள் காய்த்து தொங்கும். அதனால், பக்கத்து வீட்டுக்காரர்களும் பயனடைந்தார்கள். அதனால் , அம்மரத்தின் கிளைகள் தங்கள் வீட்டின் வளாகத்திற்குள் வருவது குறித்து  கவலை கொள்ளவில்லை.   அந்த மரத்திற்கு அருகில் ஒரு வேப்பமரம் வளர்ந்து வந்தது. அது இந்த வயதான மரத்திற்கு அருகில் வளர்வதை நினைத்து வருந்தியது. அது  கவலைப்பட்டது.  மாமரத்திடம்,” உனக்கு வயசு ஆயிடுச்சு. கீழே விழுந்து தொலைச்சுடாதே. அப்படி விழுந்தாலும் என் மேல விழுந்துடாதே. நான் வளர்கிற பிள்ளை. உன்னால நான் ஓடிச்சிடக் கூடாது.  செத்து விடக்கூடாது.” என்றது.    இப்படித்தான் ஒவ்வொரு நாளும் மாமரத்தின் வயோதிகத்தைக் கேலி செய்து பேசியது. மாமரம் அதற்காக வருந்தவில்லை. அது எப்போதும் போல் சந்தோஷமாக இருந்தது.  மாமரத்தின் கிளைகளில் அமரும் பறவைகளிடம் கொஞ்சிப் பேசியது.  அவைகளுக்கு தன் மரத்தின் கனிகளைக் கொடுத்தது.  அவைகளும் அதன் ருசியில்,  சுவையில் மயங்கிப் பேசி மகிழ்ந்தன. பறவைகள் மட்டுமல்ல அணில்களும் மரத்தில் ஓடியாடி விளையாண்டன.  தேனீக்கள், வண்டுகள், பட்டாம்பூஈச்சிகள்  என பல உயிரினங்கள்  மரத்தைச்  சுற்றி சுற்றி வந்தன.  அவையெல்லாம் இந்த வேப்ப மரத்திற்குப் பிடிக்காமல் போயின.  அணில்கள் ஏறி வேப்பம் பழத்தை உண்பதைக் கூட மறுத்தன.  பறவைகள் அமர்ந்தால் விரட்டிவிடும். இப்படியே நாட்கள் கடந்தன.

  வேப்பமரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்தது. அதன் கிளைகள் மாமரத்தை போல் பக்கத்து வீட்டிற்குச் சென்றன.  மாமரம் எச்சரித்தது. “  நீ  பக்கத்து வீட்டிற்குள்  உன் கிளைகளை விரித்து வளராதே! என்னைப் போன்று அந்தப் பக்கம், இந்த பக்கம் என கிளைகள் விரித்து நீ வளர்ந்தால் உனக்கு ஆபத்து தான் நேரிடும்.”  என்று எச்சரித்தது. “வயசான நீ எப்ப சாவாய்  என்பது தெரியாது.  நீ உன் மரணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறாய். உன்னை விரைவில் வெட்டி விடுவார்கள். உன்னில் வளரும் பழங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.  நீ அதனை உணரவில்லையா ? முதலில் உன்னை தயார் செய்து கொள். மரணத்தின் வாசலில் நிற்பதை அறிந்து கொள்.” என்று மரம் கேலி செய்தது.    “சரி இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.” என்று மாமரம் எப்பொழுதும் போல் தன் வேலையைப் பார்த்தது.  மாமரம் தேனீக்களை அழைத்தது.  “வேப்பமரத்தின் கிளைகளுக்கு எதிராக உள்ள கிளையில்  கூடுகட்டுங்கள்.” என்று கூறியது.  தேனீக்கள் காரணம் சொல்ல முடியுமா என்று கேட்டன.  எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நேரம் வரும்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றது.  வீட்டிற்கு அருகில் செல்லக்கூடிய அந்தக் கிளைக்கு எதிரே உள்ள என் கிளையில் கூடு கட்ட வேண்டும் என்பது மாமரத்தின் வேண்டுதலாக இருந்தது.  மாமரம் கூறியபடி வேப்ப மரத்தில் கிளைக்கு எதிரிலே உள்ள கிளையில் தேன்கூட்டைக் கட்டினார்கள்.தேன்கூடு வளர்ந்தது.  பக்கத்து வீட்டுக்காரர்கள் வேப்ப மரத்தின் கிளைகள் உள்ள இலைகள் கீழே உதிர்வதை கண்டு வருந்தினார்கள்.  அதன் இலைகள் உதிர்வதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டி இருந்ததை சிரமமாக நினைத்தார்கள்.

 கடைசியில் வீட்டிற்கு உள் நுழையும் வேப்பமரத்தின் அந்தக் கொப்பை வெட்ட முடிவெடுத்தார்கள். அதற்காக,  மரம் வெட்டும்  ஆட்களை அழைத்து வந்தார்கள்.  கொப்பு வெட்ட தயாரானார்கள்.  வேப்ப மரத்தில் ஏறி பக்கத்து வீட்டு சுவரில் செல்லும் கிளையிலே அமர்ந்து வெட்டுவதற்கு ஆட்கள் தயாரானார்கள்.  வேப்பமரம் அலறியது. என்னைக் காப்பாற்றுங்கள் என புலம்பியது.   மாமரம் வேப்ப மரத்தைக் காப்பாற்ற வேண்டும் என தேனீக்களுக்கு மாமரம்  கட்டளை இட்டது. வேப்ப மரத்தின் அந்தப்பக்கம் உள்ள கிளையை அறுத்தால் , இந்தப் பக்கம் மரம் எடை தாங்காமல் சரிந்து கீழே விழுந்து விடும். ஆகவே,  தேனீக்களே அதன் கிளையை வெட்ட வரும் ஆட்களை நீங்கள் கொட்டுங்கள் என்றது.  தேனீக்களும் வெட்ட வந்த ஆட்களை விரட்டி கொட்ட தொடங்கின.  மரம் அறுக்க வந்த  ஆட்கள் வேகமாக வேப்ப மரத்தில்  இருந்து கீழே இறங்கினார்கள்.   அவர்கள் வீட்டு சொந்தக்காரர்களிடம் அம்மா தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன. தேனடையில் உள்ள தேனீக்கள் கொட்டுகின்றன. ஆகவே,  இப்போது அதனை அறுக்க  இயலாது. நாங்கள் அடுத்த மாதம் வந்து அறுத்துக் கொள்கிறோம்.  அதற்குள் தேனீக்கள் சென்று விடும் என்று சொல்லி சென்றார்கள்.  வேப்பமரம்  காப்பாற்றப்பட்டது.  அது தன் செயலுக்காக வருந்தியது. மா மரத்தை நாம் எவ்வளவு கேலி செய்திருப்போம்.  இருந்தாலும்,  மா மரம் நமக்கு உதவியது. நாம் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துள்ளோம் என்பதை  நினைத்து வருந்தியது.  இப்பதெல்லாம் வேப்பமரம் தன் கிளைகளை  பக்கத்து வீட்டுப்பக்கம்   வளர விடுவதில்லை.  மாமரம் சொல்லியது போல் எதிர்புறமாகவும்,  அந்த காம்பவுண்டுக்குள் செல்லாதவாறு, தன் எடையை சமன் செய்ய  கிளைகள் பரப்பி வளர தொடங்கியது.  ஒவ்வொரு நாளும் மாமரத்திடம் பேசி அதில் வரும் பறவைகளிடம் பேசி தன் பொழுதை ஆனந்தமாக கழிக்கத் தொடங்கியது.