tamilnadu

img

பாலஸ்தீனம் - ஈரான் மீதான போரை உடனே நிறுத்துக!

கூடாரத்திற்குள் ஒட்டகம் தலையை விட்ட கதையாக இன்றைக்கு பாலஸ்தீனத்தை முழுமையாக இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை யின்படி அன்றைக்கு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாம் இருந்தோம். இஸ்ரேலுக்கு போகக்கூடாது என்று இந்திய அரசு தடை விதித்திருந்தது. அந்த காலத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுக்களில் கூட இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா 2 நாடுகளுக்கும் செல்லக்கூடாது என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். ஏன் என்றால் இஸ்ரேல் இனவெறி அரசு. தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசு. அதனால் இந்தியா ஒரு ஜனநாயக அரசு என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு இந்தியர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

பாஜகவின் இஸ்ரேல் உறவு

ஒரு இனவெறி பிடித்த இஸ்ரேல் நாட்டுக்கு திருட்டுத்தனமாக போன முதல் கும்பல் பாஜகதான். அன்றைக்கு ஏ.பி.வாஜ்பாய் அயல்துறை அமைச்சராக இருந்தபொழுது அவர் இஸ்ரேலுக்கு ரகசியமாக போய் வந்தார். இன்றைக்கு அவரது வழி வந்த பிரதமர் மோடி பகிரங்கமாக போய் வருகிறார்.

அமெரிக்காவின் அணு ஆயுதக் கொடுமை

இஸ்ரேல் இன்றைக்கு தேவையில்லாமல் ஈரான் மீது குண்டு போட்டுள்ளது. ஏன் அப்படி செய்தது என்று கேட்டால் ஈரான் அணுகுண்டு வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொல்கிறார். அமெரிக்கா ஒரு அணுகுண்டு ஃபேக்டரியே வைத்துள்ளது. உலகில் அதிகமாக அணுகுண்டு வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கா எவ்வளவு கொடூரமான யுத்த வெறி பிடித்த நாடு என்று சொல்வதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஹிரோசிமா-நாகசாகி அட்டூழியம் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது. போர் முடிந்துவிட்ட சூழலில் அமெரிக்கா போர் விமானங்கள் ஜப்பானில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் 2 குண்டுகளை போட்டுவிட்டு வந்தது. ஒரு அணுகுண்டு யுரேனியத்தில் தயாரிக்கப்பட்டது. இன்னொரு அணுகுண்டு தோரியத்தில் தயாரிக்கப்பட்டது என்பதால் அவற்றை சோதனை செய்வதற்காக யுரேனியத்தில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டை ஹிரோசிமாவிலும், தோரியத்தில் தயாரிக்கப் பட்ட அணுகுண்டை நாகசாகியிலும் போட்டு கொடிய செயலைச் செய்தது. இன்றைக்கு ஈரான், இஸ்ரேல் சண்டை நீடித்தது என்றால் அது உலகப் போருக்குக் கூட வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க ஆதிக்கம்

செங்கொடி தலைமையிலான சோவியத் முகாம் இல்லாத சூழலில் இன்றைக்கு அமெரிக்கா சண்டித்தனம் செய்து வருகிறது. நினைத்த நாட்டின் மீது போர் தொடுக்கிறது. மிரட்டுகிறது. இஸ்ரேலை தூண்டிவிடுகிறது. ஈரானுக்கு புத்தி சொல்கிறார்கள். அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று மிரட்டுகிறது. பதிலடியாக, எங்களுக்கு இஸ்ரேலை தாக்குவதுதான் சிரமம்; ஆனால் அமெரிக்காவை தாக்குவது ரொம்ப சுலபம் என்று ஈரான் சொல்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இன்றைக்கு கூட இஸ்ரேல் போரை நிறுத்தும்படி அந்த நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இஸ்ரேலைக் கண்டிக்கிறோம். பாலஸ்தீனத்திற்கு எங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம். ரஷ்ய - உக்ரைன் போரும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று சொல்கிறோம். போரின் துயரம் தாங்க முடியாதது. இஸ்ரேலின் இனவெறிபிடித்த போர் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆற்றிய  உரையில் இருந்து.