tamilnadu

img

போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமிப்பது அநீதியானது

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்துக் கழ கங்கள் உள்ளன. 22,000  பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திற்கும் பேருந்து சேவை போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. இது போன்ற போக்குவரத்து வசதி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நஷ்டம் வரும் என தெரிந்தும் சேவை நோக்கத்தோடு கிராமப்புற, மலை வழித் தடங்களில் 10,000 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. போக்குவரத்துக் கழகங்கள் லாபமற்ற வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது டன், மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திற னாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல் வேறு பிரிவினருக்கு இலவசப் பயணம் வழங்கும் அரசின் திட்டத்தையும் செயல் படுத்தி வருகின்றன. தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி உயரவும், கிராமப்புற மாணவர்கள் கல்வி வசதி பெறவும் போக்குவரத்துக் கழ கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. தமிழ கத்தின் சமூகப் பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லாபம் இல்லாத வழித்தடங்களால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு ஈடுகட்ட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

20ஆயிரம் காலிப் பணியிடங்கள்

சேவை நோக்கத்தோடு தான் போக்கு வரத்துக் கழகங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக் குறையைக் காரணம் காட்டி பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.  தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக முழுமையாக பேருந்துகளை இயக்க முடியவில்லை. எனவே, அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டும், காலிப்பணியிடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. தமிழக மக்களின் நல னுக்கான, நியாயமான இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 

ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம்

போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப் படும் பேருந்துகளுக்கு எவ்வளவு ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப, அலுவலகப் பணி யாளர்கள் தேவை என்பது நிர்ணயிக்கப் பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப் பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பணி ஓய்வு பெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதில், புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப் படவில்லை. இப்போது 20,000 காலிப்பணி யிடங்கள் உள்ளன. செலவைக் குறைப்பது என்ற பெயரில் தனியார் வெளிமுகமை மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டு நர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணி  என்பது நிரந்தரத்தன்மை வாய்ந்தது. நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டம் கூறுகிறது. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்க போக்கு வரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்தன.

சிஐடியுவின் வேலைநிறுத்த அறிவிப்பு

போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது, காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டு மென கடந்த ஏப்ரல் மாதம் சிஐடியு வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியது. வேலை நிறுத்த அறிவிப்பையொட்டி, தொழிலாளர் துறை யில் சமரசப் பேச்சுவார்த்தை துவங்கியது. சிஐ டியுவுடன் இணைந்து போராடும் கூட்ட மைப்பு சங்கங்களும் தொழிலாளர் துறையில் முறையிட்டன. அதனடிப்படையில் தொழி லாளர் துறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முத்தரப்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெறும்போது தொழி லாளர்களுக்குப் பாதகமான எந்த நடவடிக்கை யும் நிர்வாகம் செய்யக்கூடாது என சட்டம் தெளிவுபடுத்தி உள்ளது.

சட்டத்தை மீறி ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம்

பேச்சுவார்த்தை நடைபெறும்போது சட்டத்திற்குப் புறம்பாக அரசு விரைவு, மாநகர  போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு, தொழிலாளர் துறைக்கு புகார் செய்த பின்பும், போக்குவரத்துக் கழக நிர் வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. உச்ச கட்டமாக (சென்னை) மாநகரப் போக்கு வரத்து நிர்வாகம் புதிதாக ஒப்பந்தத் தொழி லாளர்களை நியமிக்க செப்டம்பர் மாதம் டெண்டர் வெளியிட்டது.

சிஐடியு வழக்கும், நிர்வாக வாதமும்

ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக் கூடாது என்ற கோரிக்கை மீது சமரசப் பேச்சு வார்த்தை நடைபெறும் நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும். காலிப் பணியிடங் களை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என சிஐடியு, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நிர்வாகத்தின் டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தது. ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞரும், போக்குவரத்துக் கழக  வழக்கறிஞர்களும் அபத்தமான வாதத்தை நீதிமன்றத்தின் முன் வைத்தனர்.

1) ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம் என்பது அரசின் கொள்கை முடிவு.
2) அரசின் கொள்கை முடிவில் தலையிட தொழிற்சங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை.
3) ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதால் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
4) தொழிலாளர் துறை முன்பு நடைபெறும் பேச்சுவார்த்தை போக்குவரத்துக் கழக நிர்வாகங்களை கட்டுப்படுத்தாது. தொழிலாளர் துறை கூறும் அறிவுரையை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொழிலாளர் துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
5) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் என நிர்வாக நடவடிக்கைக்கு தொந்தரவு செய்கின்றன.
6) ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தால் பேருந்துகளை எளிமையாக இயக்க முடியும். காண்ட்ராக்டர் நிர்வாகத்திற்கு உதவி செய்வார். நிர்வாகத்திற்கு துணையாக இருப்பார். வேலை நிறுத்தம், தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்கள் போன்ற எந்தத் தொந்தரவும் நிர்வாகத்திற்கு இருக்காது.

எனவே, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்  என்ற வாதங்கள் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டன. 

குறைந்தபட்சக் கூலிச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் : மதுரை கிளையின் மற்றுமொரு தீர்ப்பு

ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை  நியமிக்கக் கூடாது என நவம்பர் 15ஆம்தேதி   சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  2 நாட்கள் கழித்து நவம்பர் 17ஆம் தேதி மதுரை நீதிமன்றம் குறைந்தபட்சக்கூலி சம்பந்தமாக மற்றொரு தீர்ப்பை அளித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர்கள் நியமனம் செய்யப் படும்போது தினக்கூலியாக தான் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளத்தை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் வழங்குவதில்லை. பொதுப் போக்குவரத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக்கூலி சட்டப்படி எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆணை வெளி யிட்டுள்ளது. இந்த அரசாணைப் படியான சம்பளத்தை போக்கு வரத்துக் கழக நிர்வாகங்கள் வழங்குவதில்லை. எனவே, சட்டப்படி குறைந்தபட்சக்கூலி வழங்க வேண்டுமென சிஐடியு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் போராடின. இதன் காரணமாக 75 ஆண்டுகளுக்கு முன்பு 1948-ஆம்  ஆண்டு குறைந்தபட்சக் கூலிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற சட்டங்கள் இல்லை எனில் தொழிலாளர்கள் மிக மோசமாக வஞ்சிக்கப்படுவார்கள். இந்தச் சட்டத்தை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் குறைந்தபட்சக்கூலி, சட்டப்படியான கூலியை பெற்றுத் தரவும் தொழிலாளர் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னுதாரணமாக  இருக்க வேண்டிய அரசுத்துறையான  போக்குவரத்துக் கழகங்கள் குறைந்தபட்சக் கூலியை  விட குறைவான சம்பளத்தை வழங்கி வந்தன. இதற்கு எதிராக சிஐடியு வழக்கு தொடர்ந்தது. குறைந்தபட்சக்கூலி சட்டம் எங்களுக்கு பொருந்தாது.  எங்களை கட்டுப்படுத்தாது என போக்கு வரத்துக் கழக நிர்வாகங்கள் வாதம் செய்தன. சட்டத்தை அமலாக்க வேண்டிய தொழிலாளர் துறையும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வக்காலத்து வாங்கியது. சம்பளத்தைக் குறைவாகக் கொடுத்துவிட்டு தொழிலாளர்கள் பெறும் பேட்டா, கேண்டீனில் வழங்கப்படும் சாப்பாடு எல்லாவற்றையும் கூட்டினால் குறைந்தபட்சக் கூலியைவிட அதிகச் சம்பளம் வரும் என மோசமான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தன. இந்த வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம் போக்கு வரத்துக் கழகங்களுக்கு குறைந்தபட்ச சம்பளச் சட்டம் பொருந்தும் எனவும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச, சட்டப்படியான பாக்கிச் சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

அரசுத் தரப்பு வாதங்களை மறுத்து, சிஐடியு சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் வழக்கறிஞர் அஜய்கோஷ் இருவரும் ஆணித்தரமாக வாதங்களை முன் வைத்தனர்.  இதையடுத்து தமிழக தொழிலாளர் வர்க்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் வலுவூட்டும் அடிப்படையிலான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் நிலைபாட்டை நிராகரித்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:'

1)    பொதுப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டால் தங்களது தொழிலை மேம்படுத்தும் அடிப்படையில் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். பேருந்தில் சில வசதிகளை செய்து கொடுத்துவிட்டு தொழிலாளர்களை சுரண்டுவார்கள். தொழிலாளர்களுக்கு அதிகப்படியான வேலை நேரம் இருக்கும். முறையான ஊதியம் கொடுக்கப்படாது. தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளர்களாகவே மாற்றப்படுவர். ஆனால் அரசு போக்குவரத்து போன்ற பொதுத்துறை தொழிலாளர்கள் முறைசார் தொழிலாளர்களாக இருப்பதுடன் சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்படும். சட்டத்திற்குப் புறம்பான வேலைநேரம், சுரண்டல் போன்றவை தடுக்கப்படும்.  பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி கிடைக்கும். தொழிலாளர்களின் நடத்தையும், பொறுப்புணர்ச்சியும் தனியார் துறை ஊழியர்களை விட சிறப்பாக இருக்கும்.
 

2) பொதுத்துறை என்பதால் இடஒதுக்கீடு அடிப்படையில் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமனம் செய்யப்
பட்டால் காண்ட்ராக்டர் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒப்பந்த முறை என்பது இடஒதுக்கீடு கொள்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

 

3) ஒப்பந்த முறை நியமனம் என்பது சமநிலையற்ற இரு பிரிவு தொழிலாளர்களை (நிரந்தரம், காண்ட்ராக்ட்) உருவாக்கும். இதன் காரணமாக அனைவருக்கும் சமநிலை என்ற அரசியல் அமைப்பின் நோக்கம் தூக்கி எறியப்படும்.
4) இரண்டு விதமான சம்பளம், இரண்டு விதமான சலுகைகள் என சமநிலையற்ற இரண்டு பிரிவு தொழிலாளர்கள் உருவானால், தற்போது பணியில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தொழிற்சங்கத்தின் கருத்து நியாயமானது. தொழிலாளர்கள்மத்தியில் பாகுபாடு காட்டுவது தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.

 

5)    நிறுவனத்தில் நிரந்தரமான பணிக்கு சேருவதற்கு கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை நிர்ணயித்து தொழிலாளர்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனர்.  இப்படித்தான் தொழிலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என நிர்வாகமே விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.  ஆனால், நிர்வாகம் உருவாக்கியுள்ள விதிமுறைகளுக்குப் புறம்பாக யார் வேண்டுமென்றாலும் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியில் சேரலாம் என்பது எவ்விதத்திலும் நியாயமற்றது.
 

6) ஆபத்தான இந்த பரிசோதனை தொழிலாளர்களைப் பாதிக்கும். ஒரு ஒப்பந்தத் தொழிலாளி விபத்தில் சிக்கினால் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சட்டப்படி எவ்வித நிவாரணமும் வழங்காது. இது நீதிக்கு சமாதி கட்டுவதாகும்.
 

7) தொழிலாளர்கள் முறையாக வேலைக்கு வருவதில்லை என்ற நிர்வாகத்தின் வாதம் சரியற்றது. இதையெல்லாம் முறைப்படுத்த நிலையாணை சட்டம் உள்ளது. முறையான பேச்சுவார்த்தை மூலமும், சட்டப்படியும் இதை சரி செய்ய முடியும்.
 

8) நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்தால் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் செய்வார்கள் என்ற நிர்வாகத்தின் வாதம் சரியற்றது. ஒப்பந்தத் தொழிலாளி சங்கம் வைத்து போராடினால் நிர்வாகம் என்ன செய்யும்?
 

9) தொழிற்சங்கம் போராட்டம் மூலம் தொந்தரவு செய்கிறது என்று நிர்வாகம் குறிப்பிடுவது உண்மை அல்ல. ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி எப்படி அவசியமோ, அதுபோல நிர்வாகம் சட்டப்படி செயல்பட, எச்சரிக்கையாக இருக்க தொழிற்சங்கம் மிகவும் அவசியம். மிகவும் கட்டாயத் தேவையும்கூட.
 

10) ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம் மூலம் நிர்வாகம் செலவை மிச்சப்படுத்த முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.   இதுபோன்ற காரணங்களைக் கூறி ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்போம் என நிர்வாகம் வாதம் செய்வது தவறானது. போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமனம் செய்யக்கூடாது. வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். காலிப்பணியிடங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். தொழிற்சங்கம் எழுப்பி உள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.

டெண்டர் ரத்து

இவ்வாறு தீர்ப்பளித்துள்ளதுடன், நிர்வாகத்தின் டெண்டரையும் ரத்து செய்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வலுவூட்டக்கூடியதாகும். இந்தத் தீர்ப்பு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமின்றி, தமிழக அரசின் இதர பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை தடுத்து நிறுத்தப் பயன்படும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய தீர்ப்பு ஆகும்.

இரண்டு தீர்ப்புகள் - தமிழக அரசு செய்ய வேண்டியது

காண்ட்ராக்ட் முறைக்கு எதிராகவும், குறைந்தபட்சக்கூலி வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளது. போக்குவரத்துக் கழகங்கள்    அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களாகும். பொதுத்துறை நிறுவனங்கள் முன்மாதிரி வேலை அளிப்பவராக செயல்பட வேண்டும் என நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் சுரண்டல் முறை இருக்கக் கூடாது, இடஒதுக்கீடு உறுதிப்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும், தொழிலாளர் மத்தியில் சமநிலை உருவாக்கப்பட வேண்டும், தொழிற்சங்கம் அவசியம் என சுட்டிக்காட்டி   உள்ள இந்த இரண்டு தீர்ப்புகளையும் தமிழக அரசு  அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். சமூக நீதியைப் பாதுகாக்கும் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசுக்கு சிஐடியு வைக்கும் வேண்டுகோள்.