tamilnadu

img

அன்பே நம்மை ஆளுக! - நவகவி

அன்பே நம்மை ஆளுக!
வெறுப்பை விதைப்பவர் வீழுக!
     அன்பிலாதவரை அறமே கொல்லும்
     அறிக அறிக அறிக!-அன்பு
     புரிக புரிக புரிக!
 (அன்பே)
முள்இல் லாத ரோஜாவாய் 
வெறுப்பில்லா மனம் வேண்டுமே!
பன்மலர் பூத்திடும் பூங்காவாய்
பல மதம் இனம் நம் தேசமே!
     காந்தியின் பாதை சாந்தி!-வா
     கருணையை நெஞ்சினில் ஏந்தி!
இமயம் வளர்வது போல் நம்
இதயம் வளருக!
இமயப் பனிபோல் இதயம்
 ஈரம் எய்துக!
 (அன்பே)
உணவும் உடையும் நம் விருப்பம்
உயர்வு தாழ்விதில் ஏதடா?
சைவ அசைவச் சண்டைகளை
ஏழையின் குடல் அறி யாதடா!
     சகல மொழிகளும் சமமே!
     ஒருமொழிக் கேன்கரி சனமே?
    தேவ பாஷை சூத்திர பாஷை 
    தில்லு முல்லு
    சூத்திர பாஷையை வாய்க்குப் பதில் கால்
     பேசுதா சொல்லு?
 (அன்பே)
ஏழு சுரங்களில் எந்த சுரம்
உயர்ந்தது என்று நீசொல்சொல்? 
ஏழு நிறங்களில் எந்த நிறம்
தாழ்வெனக் காட்டுது சொல்வான்வில்!
    தேசம் நிற்குது தீயில்!
    மதவெறிப் பேயின் வாயில்!
சகலரும் சமம் எனும் தத்துவத்தை
மேடையில் ஏற்றுவோம் நண்பா!
சாதியப் பீடையை சாகடித்து
பாடையில் ஏற்றுவோம் வாவா!
 (அன்பே)

மக்கள் மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி  அகில இந்திய அளவில் கலைப்பயணம் நிகழ்கிறது. “அன்பிலதனை அறம்” என்ற தலைப்பில் இந்த கலைப்பயணம் தமிழ்நாட்டில் நிகழ்கிறது.13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமுஎகச, கலை இலக்கியப் பெருமன்றம், திராவிடர் கழகம், விடுதலை கலை இலக்கிய பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் பல முற்போக்கு இயக்கங்கள் இந்த கலைப்பயணத்தை நடத்துகின்றன....