இலக்கிய பேச்சுப் போட்டி 9 மாணவர்களுக்கு பரிசுகள்
சென்னை, அக். 13- ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில் 9 மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 6049 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒருவர் வீதம் 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 15, ஆயிரம் , இரண்டாம் பரிசாக தலா ரூ. 10 ஆயிரம் மூன்றாம் பரிசாக தலா ரூ. 7,500 வழங்கப்பட்டது. அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
