tamilnadu

மரியா! - வரத.ராஜமாணிக்கம்

“விடுங்க பாத்துக்கலாம்” என
மாவாட்டிய கையை அலட்சியமாக 
அவள் கழுவிய பொழுது
கோபம் எட்டிப் பார்த்தது
மூக்கு நுனி வியர்த்தது
விரல்களில் நடுக்கம் வேறு!

பளார் என அறை விழுந்தும்
மரியாளின் இரக்க பாவத்துடன்
அவளது முகம் இருந்தது
அவனை ஆத்திரப்படுத்தியது!
முடியை பிடித்து வளைத்து
நாலைந்து குத்துகள்
முதுகைப் பதம் பார்த்தது!

உதடுகளை கடித்து வலியை
உள்ளிழுத்தவள்
மறுகன்னத்தை காட்டுபவள் போல
அடுத்தது என்ன? என
புருவம் உயர்த்தி வினவினாள்!
இப்பொழுது வெறி ஏறியது

காலைத்தூக்கி இடுப்பில் உதை
தள்ளாடி சமாளித்து நின்றவள்
இவ்வளவு தானா என்பது போல
சாவதானமாய் சமையலறைக்குள்
தட்டெடுக்கப் போனாள்!

களைப்புற்று மூச்சு வாங்கியவன்
செய்வது அறியாது திகைத்து
சட்டையை மாட்டிக் கொண்டு
வீட்டு வாசலை தாண்டலானான்!

“ஏங்க ஒருவாய் சாப்பிட்டுப் போங்க”
என்றவளின் கரிசனக் குரல்
வீதிகளில் விடாமல் வெகுநேரம்
துரத்திக் கொண்டிருந்தது
வீடு நோக்கி கைப்பிடித்து
அவனை அழைத்து வந்தது!

பசியாறிப் படுத்த பொழுது
பக்கத்தில் அவள் இடம்
காலியாக இருந்தது!
சமையலறையை ஒழுங்குபடுத்தி
ஓரமாக ஒருக்களித்து படுக்க
அவளுக்கு இன்னும் நாழியிருந்தது!

எப்படிப் பார்த்தாலும்
வாழ்க்கை அவளைச் சுற்றிய
வட்டமாகவே இருந்தது!
காலியாக இருந்த அவள் இடத்தை
கைகளால் தடவியனின்
கண்களில் கண்ணீர் ததும்பியது!