சென்னை, ஜூலை 20- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்க பெரும் சமூக இயக்கத்தை முன்னெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக செவ்வா யன்று மாலை (ஜூலை 19) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:
மரபணு சிகிச்சை
சொந்தக்காலில் நின்று வருமானம் ஈட்டக் கூடிய மத்திய தர வர்க்க பெண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். ஏழை எளிய வருமானம் இல்லாத பெண்களின் நிலையோ மிக மோசமாக உள்ளது. பாதிக்கப் பட்டுள்ள பெண்களுக்காக குரல் கொடுப்ப தோடு, அந்த கொடுமைகளை தீயிட்டு அழிக்கும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி திகழும். பெண்களின் உரிமைகளை பாதுகாப்ப திலே எண்ணற்ற சாதனைகளை செங்கொடி இயக்கம் நிகழ்த்தியிருக்கிறது. கேரளாவிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் 70 ஆண்டு களுக்கு முன்பு ஈழவர் சமூகம், பட்டியலின பெண் கள் மாராப்பு அணிய முடியாத நிலை இருந்தது. ஏ.கே.கோபாலன், இஎம்எஸ் நம்பூதிரிபாட் ஆகிய கம்யூனிஸ்ட்டுகளும் பல்வேறு சீர்திருத்த வாதிகளும் இணைந்து ‘மாராப்பு சேலை’ போராட்டத்தை நடத்தி, மேலாடை அணிகின்ற உரிமையை பெற்றுத் தந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.
பெண்களைக் காத்த செங்கொடி இயக்கம்
தஞ்சை கிராமங்களில் நாற்று நடும் பெண்கள் முழங்காலுக்கு மேலே இருந்த சேலையை கணுக்காலுக்கு இறக்கிய தலைவர்கள் சீனிவாசராவ், மணலி கந்தசாமி உள்ளிட்டோரைப் புகழ்ந்து பாடுவார்கள். முழங்காலுக்கு கீழே புடவை அணியக்கூடாது என்ற நிலப்புரத்துவ கொடுமைகளுக்கு எதிராக பெண்களைத் திரட்டி பண்பாட்டுப் போராட்டத்தை நடத்தியது செங்கொடி இயக்கம். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாப்ப தற்கான விரிவான மனுவை சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. அதில் எந்த அசைவும் இல்லாத நிலையில், மக்களிடத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
காவல்துறை அதிகாரிக்கே பாலியல் தொல்லை
பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுகின்ற அனைத்து இடங்களுமே பாதுகாப்பற்றதாக மாறி விட்டன. வீடு கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. தந்தையே, பெற்ற மகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கக் கூடிய கேடுகெட்ட நிலை நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகள் கூட பாதுகாப்பற்றதாக உள்ளன. காவல் நிலையங்கள் பாதுகாப்பானதாக இல்லை. காவல்துறை கண்காணிப்பாளருக்கே பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய அனைத்து நிறுவனங்களுமே பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி வருகின்றன.
இரண்டாம் இடத்தில் தமிழகம்
தமிழகம், குடும்ப வன்முறைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிக்கிற வரை குடும்ப வன்முறைகள் இருக்கும். அதற்காக அமைதி காக்க முடியாது. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். சீர்திருத்த இயக்கம், இடதுசாரிகள், ஜனநாயக இயக்கங்களின் போராட்டத்தால், சதி, தேவதாசி முறைகள் ஒழிக்கப்பட்டன. குழந்தை திருமணங்கள் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளன. அதேபோன்று குடும்ப வன்முறையை ஒழிக்க பாடுபடுவோம். ஆணாதிக்கம் என்பது ஆண்களுடைய மரபணுவிலேயே ஊறிப் போய் விட்டதாக மாறியுள்ளது. எனவே, ‘மரபணு சிகிச்சை’ செய்ய வேண்டி உள்ளது. அதற்கான மிகப்பெரிய சமூக இயக்கத்தை முன்னெடுப்போம்.
மாநாட்டிற்கு தலைமையேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து
சீரியல் பார்த்து தீர்ப்பெழுதலாமா?
பெண் பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகளைத்தான் பார்த்துப் பார்த்து, சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டியுள்ளது. பழமொழிகள், கதைகள், புராணங்கள் அனைத் துமே பெண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்மறை யான மரபும் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன என்றார். நீதிபதிகள் மாலை நேரங்களில் சட்டப் புத்தகத்திற்கு மாறாக சீரியல்களை பார்த்துவிட்டு அதே உணர்வோடு வந்து தீர்ப்பு கூறும் நிலை உள்ளது. பெண்கள் தங்களது தாலியை கழற்றுவது கணவனுக்கு எதிரான வன்முறைதான் என்று ஒரு நீதிபதி கூறுகிறார். நீட் தேர்வு அறைக்கு பல பெண்களின் தாலியை கழற்றி விட்டுத்தான் அனுமதித்தனர். இது எந்த வன்முறையில் சேரும். மண் பார்த்து நடப்பதுதான் பெண்களுக்கு அழகு என்று கூறி வந்த காலத்தில், சோவியத் ரஷ்யா, வாலண்டினா என்ற பெண்ணை விண்ணிலே அனுப்பி அழகு பார்த்தது. அந்த சித்தாந்த செருக்கோடு மிக மோசமான பெண்ண டிமைத்தனத்தின் உச்சமாக இருக்கும் சனாதனத்தை ஒழிக்கவும், சாதி மத வெறிக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், ‘தீக்கதிர்’ ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் பேசியதிலிருந்து
கற்பு எனும் விலங்கை உடைப்போம்!
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது முதல், மற்றொரு வீட்டின் ‘வேலைக் காரியாக’ செல்வதற்கான பயிற்சி மையமாக குடும்பங்கள் உள்ளன. இதனுடைய பெரிய பயிற்சி மையமாக சமூகம் உள்ளது. கண் பார்வையிலேயே வன்முறை கலந்திருக்கி றது. படிப்பு, திருமணத்திற்கான உரிமை கூட பெண்ணுக்கு தரப்படுவதில்லை. குடும்பத் தில் வன்முறை நடைபெறுகிறது என்றால் அதை சமூகம் அனுமதிக்கிறது. சமூகமே சேர்ந்து செய்வதாக குடும்ப வன்முறை உள் ளது. தனக்கெதிரான வன்முறை குறித்து பெண்களால் பேச முடியாத நிலை உள் ளது. நான்கு சுவற்றுக்குள் வாழ்க்கை முடக் கப்பட்ட பெண், குடும்பத்திற்காக, குழந் தைக்காக, புகுந்த வீட்டின் மரியாதை காக்க வன்முறைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; இதையெல்லாம் மீறி பேசி விட்டால், அந்த பெண்ணின் நிலை என்ன? ஒரு வீட்டில், சமூகத்தில் உள்ள புரிதல், வளர்க்கப்பட்ட விதம், அவர்களின் கட்ட மைக்கப்பட்ட நம்பிக்கைகளை உடைக்கா மல் குடும்ப வன்முறையை தடுக்க முடி யாது. இத்தகைய வன்முறைகள் அனைத்தும் எனக்கும் நடந்தது. எனது உரிமையைப் பேசி யதும் அந்த வீட்டில் இருக்க இடமில்லாமல் போனது. தன்னம்பிக்கையோடு, பொருளா தார சுதந்திரத்தோடு இருந்த எனக்கும் நடந்தது. இதையெல்லாம் மீறி வெளியே வந்த பிறகும் பல்வேறுஅழுத்தங்கள் வந்தன. நடத்தையை நிர்ணயிப்பது போன்றவை நிகழ்ந்தது. ஒரு வீட்டிற்குள் நடக்கும் குடும்ப வன்முறையிலிருந்து,
அந்த பெண் நினைத் தால் மட்டும் தான், முயன்றால் மட்டும்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பெண்களுக்கு வாழ்க்கையை ஏன் ஒரு போராட்டமாக திணிக்கிறோம்? பெண் ணுக்கான உரிமை, சமத்துவத்தை பேசிக் கொண்டே மட்டும் இருப்பதால்தானே இது போன்ற சூழல் உள்ளது. இதை உடைக்க வேண்டும். பேச, எழுத ஆரம்பித்துள்ளோம். செயல்படுத்த என்ன திட்டம் உள்ளது என்று மனோ ரீதியாக பேச வேண்டி உள்ளது. இதற் கான துவக்கமாக நம்பிக்கை தந்தது இந்த கட்சியும், இந்த மேடைகள் மட்டும்தான். பெண்ணின் உடல் அவளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படும் சூழல் நிலவுகிறது. அதை எப்போது மாற்றப் போகிறோம்? திரு மணத்திற்கு முன்பு ஒருவரோடு உறவு இருந்தி ருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுகிற மனப் பக்குவம் தேவை. கற்பு என்ற விலங்கை உடைத்தெறிய திட்டம் வகுக்க வேண்டும். குடும்ப வன்முறை வழக்குகள்; மரணம் நிகழும்போது தலையிடுகிறோம். ஆனால் முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை களில் மாற்றி எழுதி காப்பாற்றி விடுகிறார்கள். இந்த துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி பேசியதிலிருந்து
கருத்துப் பிரச்சாரம் தீவிரமடையட்டும்!
சமூகம் எத்தகைய அரசியலோடு இயங்குகிறதோ அதனுடைய பிரதிபலிப்புதான் குடும்பத்திலும் நிகழ்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு அரசியல், பெண்களுக்கு கல்வி கற்பதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் உரிமை வழங்குகிறது. அதேநேரம் பெண் அடக்கமாக இருக்க வேண்டும் என்று குடும்பம் எதிர்பார்க்கிறது. இந்த பழமையான ஆணாதிக்க சமூக அமைப்பானது, பெண் களுக்கு சிறகுகளை கொடுத்துவிட்டு, அந்த சிறகுகளை வீட்டின் ஜன்ன லில் கட்டி வைக்கிறது. இப்படி இரட்டைத்தனமான விலங்குகளோடு தான் பெண் நடமாடிக் கொண்டிருக்கிறாள். பார்வையால், பேச்சால்என அனைத்து வகையிலும் பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். தாய், மகள், மனைவி, மருமகள் என பெண்கள் மீது ஏவப்படக் கூடிய வன்முறைகள் மூலமாக உலகமய நுகர்வுக் கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகளின், பெண்களின் உயிர் மலி வாக்கப்பட்டு வருகிறது. இது அரசியலா இல்லையா? இவை பேசப்பட வேண்டுமா இல்லையா? பெண்கள் மீது இழைக்கப்படுகிற அனைத்து வித வன்முறைகளும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான கருத்து பிரச்சாரத்தை அனைத்து மட்டத்திலும் முன்னெடுப்போம்.
மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசியதிலிருந்து
சட்டங்கள் இருந்தாலும் மூளையில் மநுஸ்ருமிதி
சட்டங்கள் சரியாக இருந் தாலும், விளக்கங்கள் சொல்லும் இடத்தில் நீதிமன்றங் கள் இருக்கின்றன. நீதிபதிகள் கையில் சட்டப்புத்தம் இருந்தா லும் மூளையில் மநுஸ்மிருதி உள்ளது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் விவா கரத்து இழப்பீடு கோருகின்றனர். வேலைக்குப் போகும் பெண்க ளுக்கு இழப்பீடு எதற்கு என்று நீதி பதிகள் கேட்கின்றனர். இதற்கு கார ணம் சமுதாயத்தின் அடிப்படை சிந்தனை மாறாமல் உள்ளது. பெற் றோர்களின் மனநிலையை மாற்ற வேண்டி உள்ளது. இந்த மாநாட்டில் நிறைவேற்றி உள்ள அற்புதமான முழுமையான தீர்மானம், அனைத்துவிதமான பாகுபாடுகள், வன்முறைகளைக் குறிப்பிட்டு தீர்வு சொல்லப்பட் டுள்ளது. இதை சமூகத்தில் பிரச்சா ரம் செய்ய வேண்டும். இளம் பெண்கள் மத்தியில் சூழ்ந்துள்ள அச்சத்தை போக்க வேண்டும். சொந்த வீட்டிற்குள், உறவினர்களி டம் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாத அளவிற்கு மன விகாரம், வக்கிரம் தொழில்நுட்பத் தின் வாயிலாக படிந்துள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் பாலி யல் சீண்டலை எதிர்கொள்கின்ற னர். மனதில் அது வடுவாக மாறும் போது கோபம் கொண்டு; மகிழ்வை இழந்து, இறுகி கெட்டி தட்டிப் போகின்றனர். இதில் ஈடு படுகிற ஆண்பிள்ளைகள் குற்ற வாளிகளாக மாறுகிறார்கள். கல்லூரிகளில் செல்போன் போன்ற ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து ‘லாங்டிரைவ்’ செல்லும் பழக்கம் அதிகரித்து வரு கிறது. தமிழகத்தில் பல பொள் ளாச்சி சம்பவங்கள் நிகழ்கின்றன. இதில் ஒருவர் மட்டும் சம்பந்தப பட்டு இருப்பதில்லை. குழந்தை கள், பெண் பிள்ளைகளுக்கு உரி மைகளை சொல்லித் தருவது போல, எச்சரிக்கையாக இருக்க வும் பயிற்சி தர வேண்டும். எச்ச ரிக்கையாக இருப்பது உரிமைக்கு எதிரானதல்ல. சிறுகுழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்பு ணர்வை வீடுகளில் வளர்க்க வேண்டி உள்ளது. இந்த பிரச்சனைகளை தடை யின்றி பேச வேண்டும். பாலியல் சுதந்திரம் என்ற பெயரில், அது மட்டுமே உரிமை என்று நம்பி, இயக்கத்தின் தொடர்பு, தத்துவப் புரிதல் இல்லாமல் சிக்கிக் கொள் கின்றனர். பாலியல் வன்முறை களுக்கு எதிராக அமைப்பு ரீதி யான கண்காணிப்புகளை தீவி ரப்படுத்துவதும், சட்டம், நீதி, செயல்பாடு இவற்றை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதும், குடும்பங்களுக்குள், சமூகத்திற் குள் வெளிப்படையாகப் பேசுவ தும் என பல்வேறு முனைகளில் இருந்து செயல்பட்டால் தான், குழந்தைகளை, பெண்களை பாதுகாக்க முடியும்.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி பேசியதிலிருந்து