சென்னை, ஆக. 5 - தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் ஜூலை 31 அன்று பணி ஓய்வு பெற்றார். அவரது பணி நிறைவையொட்டி சனிக்கிழமையன்று (ஆக.5) சென்னையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஸ்ரீகாந்த் மிஸ்ரா அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா பேசுகையில், தென் மண்டலத்தில் அவர் பணியாற்றிய போதிலும் அவரது சங்க செயல்பாடுகள் அகில இந்திய அளவில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தது . ஐஆர்டிஏ மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தென் மண்டலம் குறிப்பாக அவர் பொதுச்செயலாளராக இருந்த மதுரை டிவிஷன் அகில இந்திய அளவில் முன்னணியில் இருந்ததற்கு அதிகப்படியான கையெழுத்துக்களை மக்களிடம் பெறுவதற்கு காரணமானவர்களில் சுவாமிநாதனும் ஒருவர் ஆவார். காப்பீட்டுத்துறையில் இருந்து அவர் பணி ஓய்வுபெற்றாலும் இந்தியச் சமூகத்தில் பெரும்பகுதியாக இருக்கிற உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற அவர் எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என்று கூறினார்.
அமானுல்லாகான்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் அமானுல்லாகான் பேசுகையில். சுவாமிநாதன் போன்ற சிறந்த தொழிற்சங்க தலைவர்களை உருவாக்கியதற்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பெருமிதம் கொள்கிறது. சங்கத்தின் அகில இந்தியச் செயற்குழுவில் அவர் இடம்பெற்றிருந்தபோது முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது அவரது தொலை நோக்கு பார்வையும் அறிவாற்றலும் சங்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்கப்போராட்டத்தின் ஒரு பகுதி என்பதை அவர் எப்போதும் நினைவுகூர்வார். எனவே தான் அவர் தனது தொழிற்சங்க பணிகளை முடித்துக்கொண்டு அடித்தட்டு மக்களைச் சாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க பணியாற்றி வருகிறார். இதுதான் அவரது சிறப்பு என்றார்.
சு.வெங்கடேசன்
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், “ஊசலாட்டமில்லாத மார்க்சிய சிந்தனையாளனின் செயல்பாட்டு வடிவமாக சுவாமிநாதன் உள்ளார். அவரது வாசிப்பு, கற்றல் திறன் வியக்க வைக்கிறது. பணி நிறைவை கடந்து அவரது பங்களிப்பு மிகமுக்கியமானதாக இருக்கும். தொழிற்சங்க வாழ்வு பற்றிய நூலை சுவாமிநாதன் எழுத வேண்டும். நம்முடைய தொழிற்சங்கத் தலைவர்கள் செய்த தியாகத்திற்கு ஈடுஇணை இல்லை. அது குறித்து 10 விழுக்காடு பதிவு கூட இல்லை. எழுது கிற வரலாறுதான் நிலைக்கும். எனவே, அது கற்பித்துக் கொண்டே இருக்கும். இதை சுவாமி நாதன் செய்தே ஆக வேண்டும்” என்றார்.
கே.கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், “தீண்டாமையை ஒழிப்பது மத்திய தர வர்க்கத்தின் கடமை என்பதை உணரச் செய்து, போராட்டக்களத்திற்கு கொண்டு வந்ததில் சுவாமிநாதனுக்கு முதன்மையான பங்கு உள்ளது. அரசியல், தொழிற்சங்கம், பண்பாட்டு இயக்கங்கள் அவரை அரவணைத் துக் கொள்ள தயாராக உள்ளன” என்றார்.
கே.சாமுவேல்ராஜ்
“சாதியை பற்றி பேசினாலே தீப்பிடித்துக் கொள்ளும் சூழலில், சாதி ஒழிப்பிற்காக போராடும் ஒரு அமைப்பிற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய பேருதவியாக இருந்த சுவாமிநாதனின் பங்கு போற்றுதலுக்கு உரியது. என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கூறினார்.
கே.சுவாமிநாதன்
ஏற்புரையாற்றிய சுவாமிநாதன், “சாதாரண தோழனை பன்முகத்தன்மை கொண்டவனாக மாற்றியது ஏஐஐஇஏ. தொழிற்சங்கம் சமூக அக்கறை உள்ளவனாக மாற்றியது; பண்படுத்தியது. ஒரு தொழிற்சங்க இயக்கம் ஊதியம், பொதுத்துறை பாதுகாப்பு என்பதைத் தாண்டி சுதந்திரமாகச் செயல்பட ஏஐஐஇஏ அனுமதித்தது என்றார். நவீன தாராளமயமாக்கலை எதிர்த்து, பாலின சமத்துவத்தை நோக்கி, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஏஐஐஇஏ-வின் வரலாறா கவே இருக்கும் என்றும் பொதுத்துறையைப் பாதுகாக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் அதற்கான பாதையில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் கே.சுவாமிநாதன் குடும்பம் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஒரு லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், காப்பீட்டு ஊழியர் சங்கம், சென்னை கோட்டம் - 1 ஆகியவற்றிற்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் ஒர்க்கர் இதழுக்கு 10ஆயிரம் ரூபாயும் நன்கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ். ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். பகுதி-1 ன் தலைவர் ஜி.ஜெயராமன் வரவேற்றார். மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், இணைச்செயலாளர் ஆர்.கே.கோபி நாத், அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியர் சங்க தலைவர் குன்னிகிருஷ்ணன், பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மதுரை கோட்டச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன், பெங்களுரு கோட்டச் செயலாளர் கீதா உள்ளிட்டோர் பேசினர். சென்னை கோட்டம் - 2ன் பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங்களா நன்றி கூறினார்.