tamilnadu

7 கோவில்களில் முதலுதவி மையங்கள் துவக்கம்

சென்னை,டிச.31- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி உள்பட 7 கோவில்களில், பக்தர்களின் தேவைக்காக முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 31 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் டிசம்பர் 31 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்,  திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், மேல்மலையனூர்- அங்காள பரமேஸ்வரி கோவில், சோளிங்கர்- இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மருதமலை- சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி-  சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி-தண்டா யுதபாணி சுவாமி கோவில் (மேம்படுத்தப்பட்ட) ஆகிய 7 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

முதலுதவி மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோவில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி செய்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்த மானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம் வீதம் 10 திருக்கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி திருக்கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.