பொங்கல் விழாவையொட்டி வாங்கப்படுகிற பொருட் களில் அகப்பையும்,பிரி மனையும் இருக்கும். தற்போது இவை அருகி வருகிற பொருள்களாக மாறிவிட்டன. குடிமக்கள் தங்கள் தேவைகளுக்காக எல்லாவற்றையும் தாங்களே தயாரித்துக் கொள்ளும் திறன் பெற்றிருந்தார்கள். இயற்கை சார்ந்த வாழ்வியலும், இயற்கைக்கு கேடு விளைவிக்காத வாழ்க்கை முறைகளையும் கையாண் டார்கள். தங்களின் உழைப்பை எளிமையாக்கிக்கொள்ள கருவிகளை தயார் செய்தவர்கள்,இயற்கையில் கிடைக்கப் பெறுகிற எல்லாவற்றையும் கருவிகளாகவும் ஆயுதங் களாகவும் மாற்றிக்கொண்டனர்.அப்படி சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட இயற்கை சார்ந்த வாழ்விட உபயோக பொருட்களே, பிரிமனையும் அகப்பையும். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் எல்லா கிராமங்களில் உள்ள வீடுகளிலும் பிரிமனையும் அகப்பையும் சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை முற்றிலும் பயன்பாட்டில் இல்லாத போதும் பொங்கல் மற்றும் சில திருவிழாக் காலங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு மரபு சார்ந்த பொங்கலிட மக்கள் மண்பானை உடன் சேர்த்து அடுப்பு, பிரிமினை, அகப்பை ஆகியவற்றை வாங்குவது வழக்கம். “ ஓர் அகப்பை அன்னமிட” என்று காளமேகப் புலவரும், “ஓர் அகப்பை மோர் குழம்பை எடுத்து ஊற்றினான் ராமன் “ என்று கம்பரும் குறிப்பிட்டுள்ளனர்.
தேங்காய் சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி எனப்படும் தேங்காயில் இருந்து பெறப்படும் ஓட்டோடு மூங்கில் குச்சியைச் சொருகி கரண்டி போல் இருக்கும் வடிவமே அகப்பை ஆகும்.இதற்கு சட்டுவம் என்ற பெயரும் உண்டு. தச்சுத் தொழிலில் ஈடுபடும் எல்லா தச்சுத் தொழி லாளர்களும் அகப்பை செய்வதில்லை, ஒரு சிலரே செய்து வருகின்றனர். அகப்பையில் பலவகை சொல்கின்றனர். தட்டகப்பை, சாந்தகப்பை, முக்கண்அகப்பை, சிற்றகப்பை என குறிப்பிடுகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் முக்கண் அகப்பை வாங்குவதில்லை என்று கூறுகின்றனர். அகப்பை இப்போது சில நவீன வடிவங்களிலும் கிடைக்கிறது.வலைதள விற்பனை தேடுதளங்களில் ஒரு அகப்பையின் விலை பல மடங்காக அச்சிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து ஒரு ஜோடி அகப்பை 30 முதல் 40 ரூபாய்க்கு வாங்கப்பட்டு 80 முதல் 100 ரூபாய்க்கு நகர்ப்புறங்களில் விற்பதை காணமுடிகிறது.ஒரு நாளில் ஒரு தச்சு தொழிலாளி 50 முதல் 100 அகப்பை வரை செய்கின்றனர். சில இடங்களில் தனி நபராகவும்,சில இடங்களில் குழுவாகவும் இருந்து அகப்பைகளை தயாரிக்கின்றனர்.
நெல் அறுவடை முடிந்த பின்பு நெல்லின் தாள் எனப்படும் வைக்கோல் கொண்டு செய்யப்படுகிற, சமையலறைக்கு இன்றியமையாத பொருளாக பிரிமனை அங்கம் வகிக்கிறது. பாத்திரங்களின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்தி சாயாத வண்ணம் பாதுகாக்கிறது. சமையல் செய்யப்பட்ட பாத்திரத்தின் வெப்பத்தை தரைக்கு கடத்தாமல் தரைக்கும் பாத்திரத்திற்கும் இடைநின்று பாதுகாக்கிறது. சமைக்கப்பட்ட பாத்திரத்தின் அடிப்பகுதி கரி பிடித்திருந்தால் தரை கறைபடாமல் இருப்பதற்கு உதவுகிறது. இதை செய்பவர்கள் பெரும்பான்மையாக விவசாயக் கூலித் தொழிலாளியாகத்தான் இருக்கின்றனர். தற்போது மிகவும் வயது முதிர்ந்த கூலித் தொழிலாளிகள் இதை செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் பிரிமனை பின்னுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஒரு ஜோடி பிரிமனை 35 முதல் 40 ரூபாய் வரை விவசாய தொழிலாளி இடமிருந்து வாங்கப்பட்டு ஜோடி 100 ரூபாய்க்கு பொங்கல் காலத்தில் கடைத்தெருக்களில் விற்கப்படுகிறது. உலோகத்திலான தளவாடப் பொருட்கள் பெரும் பான்மையாக பயன்பாட்டிற்கு வந்த பின்பும், பிரிமனை என்பது விவசாய மரபின் நீட்சியாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. பண்டிகைக்காக நாம் வாங்குகின்ற அகப்பையும், பிரிமனையும் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு தச்சு தொழிலாளியையும், ஒரு விவசாயக் கூலி தொழி லாளியையும் வாழவைக்கும்; அவர்களது உழைப்பையும் உற்சாகப்படுத்தும் என்பது உறுதி. ஒரு விவசாயக் கூலி தொழிலாளியிடமிருந்து பிரிமனையும், ஒரு தச்சுத் தொழிலாளியிடமிருந்து அகப்பையும் பெற்று ஒரு சிவந்த மண் பானையில் மர பார்ந்த பொங்கலை இடுவதன் மூலம் நாம் கொண்டாடுகிற பண்டிகைகள் கூட உழைப்பிற்கு நாம் கொடுக்கும் உயர்ந்தபட்ச மரியாதையாகும்.
- உதயகுமார், நாகை