tamilnadu

img

மார்ச் 30, 31, ஏப்.1 ‘ சிபிஎம்-மின் சித்திரை திருவிழா’

மதுரை, மார்ச் 14-  உழைக்கும் மக்களுக்காக போராடும் கம்யூனிஸ்டுகளுக்கு மே தினம், நவம்பர் புரட்சி தினம், கட்சியின் மாநாடுகள்தான் திருவிழாக்கள்.  தமிழகத்தின் மதநல்லிணக்க திருவிழாவான ‘மதுரை சித்திரை திருவிழா’  அனைத்துத்தரப்பு மக்களின் பங்கேற்புடனும் கொண்டாட்டத்துடனும் ஆண்டுதோறும் நடைபெறும்.  அந்த வகையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி  அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிற மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  23 ஆவது மாநில மாநாடு மார்ச் 30ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மதுரை மாவட்ட  நீதிமன்றம் அருகில்  உள்ள ராஜா முத்தையாமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடுதான் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு சித்திரை திருவிழா என்று கூறி கட்சித்தோழர்கள் மாநாட்டுப்பணிகளை உற்சாகமாகச் செய்து வருகிறார்கள். கொரோனா அச்சத்திலிருந்து விடுபட்டு இந்த ஆண்டு சித்திரை விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டத்  தோழர்கள் அடங்கிய வரவேற்புக்குழு மாநில மாநாட்டுப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டை சித்திரை திருவிழாவைப்போல் நடத்த, கடந்த 15 நாட்களுக்கு முன் தயாராகி பணிகளைச் செய்து வருகிறார்கள்.  மாநாட்டை மக்கள்  மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் வண்ண சுவர் விளம்பரங்கள் தோழர்களின் கைவண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு மற்றும் கிளைச்செயலாளர்கள், கட்சித்தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் தினந்தோறும் மாநில மாநாடு குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து, நிதி திரட்டி வருகின்றனர். மக்களும் தொழிலாளர்களும் மனமுவந்து நிதி வழங்கி வருகின்றனர்.

1972 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் மதுரையில் 9 ஆவது அகில இந்திய மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது  அகில இந்திய தலைவர்களைக் காண மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சித்திரை திருவிழா விற்கு வருவது போல் கட்டுச்சோறு கட்டி மாட்டு வண்டிகளில் செங்கொடி பறக்கவிட்டு வந்தார்கள் என்று இன்றும் மதுரையில் உள்ள மூத்த தோழர்கள் குறிப்பிடுவார்கள்.  23 ஆவது  மாநில  மாநாடு தற்போது மதுரையில்  நடைபெறும் சூழலில் தென்மாவட்டங் களைச் சேர்ந்த கட்சிக் குடும்பத்தினர்  மாநில மாநாட்டின் பொதுக்கூட்டத்தைக் காண மதுரையில் குவிய உள்ளனர்.  

இந்த நிலையில்  மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த,  வரவேற்புக்குழு தலைவர் -மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன், வரவேற்புக்குழுச் செயலாளர் - மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், வரவேற்புக்குழு பொருளாளர் - புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர்  தலைமையில் சுமார் 100 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் தங்களுக்கான பணிகளை உற்சாகத்துடன் செய்து வருகிறார்கள். மாநில மாநாட்டு செந்தொண்டர் பேரணியில் அணிவகுத்துச் செல்ல மாநிலம் முழுவதும் பத்தாயிரம் தொண்டர்களும் மதுரை மாவட்டத்தில் மட்டும்  ஆயிரம் செந் தொண்டர்களும் என்று மதுரை  மாநகர் - புறநகர் பகுதிகளில் 10 மையங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அன்றைய தினம் மதுரை செம்மய மாக காட்சியளித்து, செங்கொடி கட்சியின் மாநாடு எழுச்சியாக துவங்கும். தேசத்தின் இருளை செவ்வொளி கொண்டு அகற்ற மாநாடு வழியமைக்கும்.

- ஜெ.பொன்மாறன்