தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பெரம்பலூர், மே 25- பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து விதிமுறை மற்றும் பள்ளி கல்வித்துறை விதிமுறைகளின் படி இயக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 350 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜுன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பையொட்டி, போக்குவரத்து விதிமுறைகளின்படியும், பள்ளி கல்வித்துறையின் விதிமுறைகளின்படியும் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டார். அதன்படி, பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை உதவி ஆசிரியர் கோகுல் தலைமையில், எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் கண்காணிப்பு குழு உறுப்பினர்களான டிஎஸ்பி ஆரோக்கியராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகாம்பாள், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவ ஆகியோர் கொண்ட குழுவினர், தனியார் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து மற்றும் பள்ளி கல்வித்துறை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். 175 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், போக்குவரத்து விதிமுறைகளின்படி இயக்கப்படாத 7 வாகனங்களில் சில குறைபாடுகளை கண்டறிந்து 7 நாட்களுக்குள் அதனை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களின் உடல் தகுதி, சீருடை மற்றும் பள்ளி வாகனத்தின் பாதுகாப்புகள் மற்றும் விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.