நாகர்கோவில், செப்.13- கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே நடைபெறும் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். கடல் நடுவே அமைந்திருக்கும் விவே கானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, வட்டக் கோட்டை போன்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழக படகு போக்குவரத்து மூலம் சென்று வருகின்றனர். விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும் படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறை களும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவே கானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து இயக்கப்படும். இதற்குத் தீர்வு ஏற்படுத்தும் வித மாக விவேகானந்தர் நினைவுப் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக நெடுஞ் சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.