அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
கரூர், ஆக.23 - கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாமல் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் நேரடி களஆய்வு நடத்தினர். இதுகுறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ கூறியதாவது: குளித்தலை நகரம் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ளது. குளித்தலை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளைப் படைத்துள்ளது. கலைஞர் கருணாநிதி முதன் முதலில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை. முழுவதும் விவசாயப் பகுதியான குளித்தலை நகரத்தைச் சுற்றி நெல், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள இந்நகரத்தை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இவ்வளவு பெருமை மிக்க இந்த குளித்தலை நகரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நோயாளிகள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கிராமப்புற மக்களின் நம்பிக்கை
கிராமங்களில் வசிக்கும் மக்கள் விபத்து, விஷக்கடி, பிரசவம், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்குத்தான் வருகின்றனர். ஏழை- எளிய மக்களின் மருத்துவத்திற்கான குறைந்தபட்ச நம்பிக்கையாக இருக்கும், குளித்தலை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் இடம் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதே போன்று ஊசி போடும் இடமும் ஒன்றுதான் உள்ளது. அதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே அறையில் ஊசி போடுகின்றனர். போதிய அளவில் செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாமல், பெயர் அளவுக்கு மட்டுமே அரசு மருத்துவமனையாக குளித்தலை அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால் அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றே இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடனடியாக தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். ஊசி போடும் இடத்தை ஆண்கள்-பெண்களுக்கு என தனித்தனி பகுதியாக பிரித்து ஊசி போட வேண்டும். இதற்கு மருத்துவ நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டுக் கொட்டகையா? காத்திருப்பு அறையா?
நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் துணைக்கு வருபவர்கள் காத்திருப்பதற்காக ஒரு கொட்டகை அமைத்து அதன் கீழ் 20 நாற்காலிகளை போட்டிருக்கிறார்கள். அதில் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அமர முடியாது. கிராமப் புறங்களில் மாடுகளை கட்டி வைப்பதற்காக போடப்படும் கொட்டகை போன்று, அமைத்து அதில் நோயாளிகளையும் உடனிருப்பவர்களையும் அமர வைத்து, அதற்கு ‘காத்திருக்கும் அறை’ என்ற பெயரை வைத்துள்ளனர். நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மனித நேயமற்ற முறையிலும், எவ்வித அக்கறையும் இன்றி குளித்தலை அரசு மருத்துவமனை நிர்வாகம் நடத்துகிறது. புதிய காத்திருப்பு அறை கட்ட வேண்டும். அதில் மின்விசிறி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் திறந்த வெளியில் சாப்பிடுகின்றனர். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுக் கூடம் அமைக்க வேண்டும்.
உரிய சிகிச்சை வழங்க வேண்டும்
மருத்துவமனைக்கு வருபவர்களை பரிசோதித்து, பெயரளவுக்கு சிகிச்சை வழங்கும் நிலை தான் உள்ளது. விபத்து மற்றும் அவசரத்துக்காக வரும் நோயாளிகளை உடனடியாக திருச்சி மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில் அனுப்பி விடுவதிலேயே குளித்தலை அரசு மருத்துவர்கள் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். காரணம், இரவு நேரங்களில் தேவையான மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்நிலையை கைவிட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. எனவே, சிகிச்சைக்கு வருபவர்களை உள்நோயாளியாக அனுமதித்து அவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய மருத்துவ உபகரணங்களையும், மருந்து, மாத்திரைகளையும் இருப்பில் வைக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் குளித்தலை அரசு மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீரைத் தேடி அலையும் நோயாளிகள்
இங்கு புறநோயாளிகள், உள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மருத்துவமனையில் குடிநீர் குழாய்கள் மட்டுமே இருக்கிறது. அதில் தண்ணீர் வருவதே இல்லை. கள ஆய்வின் போது, ஒவ்வொரு குடிநீர் குழாய்களையும் திறந்து பார்த்ததில், எந்தக் குழாயிலும் தண்ணீர் வரவில்லை. மருத்துவமனை முழுவதும் தண்ணீர் இல்லாததால் தண்ணீருக்காக பொதுமக்கள் வெளியில் உள்ள கடைகளுக்கு அலையும் மோசமான சூழல் நிலவுகிறது. தண்ணீர் வராமல் இருப்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும் தெரியாதா? நோயாளிகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட வழங்க முடியாமல் செயலற்று இருக்கும் குளித்தலை அரசு மருத்துவமனையின் அலுவலர்கள் மீது, கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி, சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை 24 மணி நேரமும் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். எனவே, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மீண்டும் அறிவிக்க வேண்டும்.
தொகுப்பு: சி.செல்லதுரை