tamilnadu

அறியாமை தேயும்! - கோவி. பால. முருகு

கோவி. பால. முருகு

பாட நூல்க ளோடு நீயும்
படிப்பாய் பலவகை ஏடு!
கிடைக்கும் இன்பம் அறிவு - அதில்
கிட்டும் சிந்தனைச் செறிவு!

நூலகம் சென்று படிப்பாய் - நல்ல
நூல்களைத் தேடிக் குவிப்பாய் !
உலகம் உன்னில் விரியும் - உன்
உயர்வு கண்ணில் தெரியும்!!

நாளிதழ் வாரம் மாதம் - என்றே
நன்றாகும் இதழின் கீதம்!
வாளினும் கூர்மை எழுத்து! - அதை
வாசிப்பாய் கண்கள் விழிதது!

சிறுவர் கதைகள் பாடல்களை -நீ
சிறப்பாய் படித்திட தேடியலை!
பெருகும் கற்பனை வளத்தாலே - உன்னை
பேர்பெற வைத்திடும் எழுத்தாலே!

பாடத்தைத் தவிரப் பிறநூல் - எதையும்
படிக்காதே என்பவர் பதர்நெல்!
தேடியே நூல்பல கற்றால் - வாழ்க்கைத்
தெளிந்து ஒளிவீசும் அவற்றால் !

அறிஞர் பலரின் உயர்வு - நூல்கள்
ஆய்ந்ததால் வந்த அறிவு!
அறிஞர் ஆக நீயும் - பன்னூல்
அறிந்தால் அறியாமைத் தேயும்!