காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
திருவாரூர், மே 29- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம்- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் வி.குமார் தலைமை வகித்தார். திருவாரூர் மண்டலச் செயலாளர் சி.ஆர். அண்ணாதுரை மற்றும் தஞ்சாவூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை சார்ந்த மண்டலச் செயலாளர்கள் என்.ராஜ்குமார், பி. தமிழரசன், ஜி. சுதர்சன்பாபு, பி. முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக் களத்திற்கு வருகை தந்த சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பருவ கால பணியாளர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில், திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், கே.பி. ஜோதிபாசு மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, மாவட்டத் தலைவர் எம்.கே. என். அனிபா, மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன், அமைப்பின் மாநிலச் செயலாளர் என். ராசப்பனன், மண்டலத் தலைவர் கே.எஸ். ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர், உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி நிறைவுரையாற்றினார்.