நாகர்கோவில், ஆக.13- கன்னியாகுமரி கடலில் ஞாயிறன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மாவட்டத்தின் பிரச்சித்தி பெற்ற சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், கடற்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே கூட்டம் வர தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கன்னி யாகுமரிக்கு வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. மேலும் பயணிகள் வருகை திடீர் என்று அதிகரித்ததால் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு காவலர்கள், சுற்றுலா காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.