tamilnadu

உதகை, கோத்தகிரியில் கடும் உறைபனி: தேயிலை மகசூல் பாதிப்பு

உதகை, டிச.16- நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட கூடுதலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. டைகர் ஹில்  அணை, கோடப்பமந்து, அப்பர், தொட்டபெட்டா, லோயர், கிளன்ராக் உள்பட 5 அணைகளும் நிரம்பியுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் மழை குறைந்து சற்று வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலையோர புல்வெளிகளிலும் உறைபனி காணப்படுகிறது. அதிகாலை நேரத்தில் ஊட்டி தாவரவி யல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடிகள், மரங்களில் உள்ள இலைகள் மற்றும் தாவரவியல் பூங்கா புல்வெளி தரைகள், மலர்செடிகள் என அனைத்திலும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் காலையில் கடும் மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை.