tamilnadu

img

அநீதியின் நெருப்பு அணையாத வெண்மணி

கண்ணூர், ஏப்.5- கீழ்வெண்மணி கிராமத்தில் எரிந்த குடிசை. அதிலிருந்து விழுந்த நெருப்புத் துண்டுகளுக்கு மத்தியில் உயிரிழந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கிடக்கின்றனர். அதில் கருகிப்போன சிறு குழந்தைகள் கூட இருக்கிறார்கள். நெஞ்சைப் பிளக்கும் அந்தக் காட்சி வரலாற்றின் அநீதிகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலக மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘வரலாறு ஒரு போராட்ட ஆயுதம்’ என்ற கண்காட்சியில் கீழவெண்மணிப் படுகொலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள கீழவெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நிலப்பிரபுக்களால் 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கான வரலாற்றுச் சாட்சியாக இந்தக் காட்சி அமைந்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடத்தியதே அவர்களின் தவறு. 23 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 44 பேர் குடிசைக்குள் அடைத்து தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.  சிற்பிகள் டி.பி.ராமச்சந்திரன், சுகேஷ் நாராயணன் ஆகியோர் சோகத்தின் உக்கிரம் குறையாமல் காட்சியை உருவாக்கியுள்ளனர். மனித உருவங்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டன. எரிக்கப்பட்ட குடிசைக்கு அருகிலேயே விவசாயத் தொழிலாளர்களுக்கு நில உரிமையாளரும் அவரது கும்பலும் செய்த அட்டூழியங்களும் பதிவாகியுள்ளன. மரத்தில் கட்டியிருந்த ஒரு தொழிலாளி மீது பண்ணையாரின் உத்தரவின் பேரில் குண்டர்கள் வாள்களை ஏந்திய காட்சியும் உள்ளது. இந்த காட்சிப்படுத்தலின் மூலம், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் பார்வையாளர்களால் படம்பிடிக்க முடியும். நாடு கண்ட போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் மூலம் பயணிக்க இந்தக் கண்காட்சி நமக்கு உதவுகிறது. பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை.