காலிங் பெல் அடித்தது... “தம்பி... போய்ப்பாருப்பா, யாருன்னு..” என்று சமையலறையில் இருந்து அம்மாவின் குரல் கேட்டு, சரண் போய் கதவைத் திறந்தான். வாசலில் அப்பாவின் நண்பர். “அப்பா இல்லையா” என்று அவர் கேட்டபோது, குளித்து விட்டு வந்த அப்பாவும் “வாடா” என்று நண்பரை வரவேற்றார். சமையலறைக்குள் இருக்கும் அம்மாவிடம் தஞ்சம் புகும் எண்ணத்தில் ஒரு பாடலை முனங்கிக் கொண்டே சரண் நகர்ந்தான். “என்னடா.. ஒருமாதிரி வர்ற” “அப்பாவோட ஃபிரண்டு வந்துருக்காரு”. “அதனால உனக்கென்ன...” “எப்புடிப் படிக்குற... அடுத்து என்னனு கேட்டுத் துளைச்சு எடுப்பாரு..”.
“சொல்லிட்டுப் போயிற வேண்டியதுதான..” “போம்மா... இவரு மட்டும் கேட்டா மட்டும் பரவா யில்ல... வர்றவங்க, போறவங்க எல்லாம் இதே கேள்வியக் கேட்குறாங்க..”. என்பதற்குள், மீண்டும் காலிங் பெல். “போய்ப்பாரு” என்று அம்மா கை காட்டி னார். கதவைத் திறந்து விட்டு, “அம்மா உங்களுக்குத் தான்” என்றவாறே நகர முயன்றவனை, அப்பா வின் நண்பர் நிறுத்தினார்.. அப்பாவும், “இங்கே வா” என்றார். அமர் வதற்குள், “உனக்கு கால்பந்து விளையாட்டு ரொம்ப புடிக்குமாமே” என்றார் அப்பாவின் நண்பர். அப்பா வின் முகத்தை நிமிர்ந்து பார்க்கையில், “உங்க அப்பாதான் சொன்னார்” என்று நண்பரே மறுபடியும் தொடர்ந்தார். அருகில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பந்தையும் வெளியில் எடுத்தார். சரணின் கண்களில் மத்தாப்பு. மனதுக்குள்ளும் இருந்தது. கையில் வாங்கியவனிடம், “இந்தப் பந்து எங்க செஞ்சது தெரியுமா?” என்றார். தெரியலயே என்பதைக் கண்களில் காட்டியவாறு நிமிர்ந்தான் சரண்.
அவரே, “மீரட்” என்றார். “இந்தியாவுல அங்க தான் இந்தப் பந்துகள்லாம் அதிகமா செய்யுறாங்க... உனக்கு எதுல விளையாடனும்னு ஆசை” என்று கேட்டார். “உலகக் கோப்பைல..” கண்களை விரித்தவாறு, பந்தை இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்தான். “இந்தப் பந்த வெச்சு அங்க விளையாட முடியுமா?” என்ற அவரின் அடுத்த வினா, அவனைக் குழப்பியது. அதை முகத்திலும் காட்டினான். “உலகக் கால்பந்து சம்மேளனம் அங்கீகரிச் சுருக்குற பந்துகளதான் அங்க வெச்சுக்க முடியும்..” என்ற நண்பரின் பேச்சை வெட்டிய அப்பா, “அந்த பந்துலாம் பாகிஸ்தான்லதான் செய்யுறாங்க... அதுவும் சியால்கோட்டுங்குற ஊர்ல மட்டும் பத்தாயிரம் ஆலைகள் இருக்கு..” என்றார். “பொ.ஆ.மு(பொது ஆண்டுக்கு முன்) 476 ஆம் ஆண்டுலயே சீனாவுல விளையாடி இருக்காங்க.. சில நாடுகள்ல மனுஷத் தலைய உதைச்சு விளையாடிருக்காங்க... அப்புறம் ரப்பர், தோல்னு பந்துகள செஞ்சு, இப்போ செயற்கை நெகிழிக்கு வந்துட்டாங்க.. பாலியுர்ஈத்தேன் மற்றும் பாலிவினைல் குளோரைடு ஆகிய இரண்டிலும் இருந்துதான் செயற்கை நெகிழியத் தயாரிக்குறாங்க.”.தொடர்ந்தார் அப்பா. “பாலிவினைல் குளோரைடுதான் பி.வி.சி” சரணும் விடவில்லை. சமையலறையில் இருந்து வெளிவந்த அம்மா, தேநீரை வைத்து விட்டு நகர்ந்தார்.
“இந்தப் பிவிசியப் பயன்படுத்தக் கூடாதுன்னு உலகம் முழுதும் எதிர்ப்பு இருக்கு..” என்று நண்பர் சொன்னபோது, சரணின் கால்கள் பந்தை இறுக்கின. “உங்க அப்பா படிக்குற காலத்துலயே, இப்புடி நிறைய தெரிஞ்சு வெச்சுக்கிட்டு எங்களுக்கு சொல்லிட்டே இருப்பாரு... வித்தியாசமா யோசிப்பாரு... உங்க காலிங் பெல் கூட, “மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்” னு பாடுது... இந்தப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டுதான் சமை யலறைக்குள்ள போன...” “பாத்தியா. உங்க அப்பாவோட உத்திய... காலிங் பெல்ல கூட பாடம் படிக்குற மாதிரி ஏற்பாடு செஞ்சுருக்காரு...” “காலிங் பெல் தேர்வு பண்ணுனது அம்மா..”. என்றவாறே மீண்டும் சமையலறையை நோக்கி சென்றான் சரண்.