இப்போதெல்லாம்-
தொலைக்காட்சித் தொடர்களில்
அதிகம் வருவது-
“இவருக்குப் பதிலாக இவர்!”
என்னும் தொடர்தான்!
“எல்லாம் மாறும்” எனும்
இயற்பியல் தத்துவத்தை
எளிதாகச் செய்பவர்கள்
இவர்கள்தான்!
அண்ணன்-தங்கைக் கதையில்
இருவரையும் மாற்றிவிடுவார்கள்! பிறகு
வில்லன் நாயகனாவான்
நாயகன் வில்லனாகிவிடுவான்!
அம்மா மாறுவார்
பெரியம்மாவும் மாறுவார்
பிள்ளைகள் மாறமாட்டார்கள்!
சித்தப்பா மாறுவார்!
சித்தியும் மாறிவிடுவார்!
சித்திரவதை மட்டும் தொடரும்!
எல்லாத் தொடரிலும்
இரண்டாம் தாரம் இருக்கும்!
கற்புள்ள கணவனே என்றாலும்
மனைவியை மாற்றிவிடுவார்கள்
பாண்டியன் ஸ்டோரில்
முல்லைக்குப்பிறகு ஐசும் மாறும்!
ரோஜாவுக்கு மைத்துனர் மாறுவார்,
பூமிகாவுக்கு மைத்துனி மாறுவார்
வெண்ணிலாவுக்கு நாயகனே மாறுவார்!
“இவர்யார் புதிதாக?
அவரை மாற்றிவிட்டார்களா?
அடப்பாவிகளா…!” என்பார்கள்
அறியாத சிலர் பாவம்!
“அய்யோ அவர் இறந்துவிட்டாரா..?” என
இரங்கும்போதே,
இன்னொரு தொடரில் அவர்
இன்னொருவராக வந்து
ஆறுதல் படுத்துவார்
“எப்படா முடியும்?” என்று
இப்போது பலரும் நினைப்பது
தன்வீட்டுப் பெரிசுகளைவிட
இழுத்துக் கொண்டே கிடக்கும்
இந்தத் தொடர்களைத் தான்!
இறந்த பின்னும்
எட்டாம்நாள் சடங்குமட்டும்
இரண்டு மாதம் நடக்கும்!
கருவுற்ற நாயகிக்குக்
குழந்தைபிறக்க-
குறைந்த பட்சம்
இரண்டு ஆண்டாகும்!
குழந்தை பிறந்த பிறகு
இரண்டே வாரத்தில் அவன்
இளைஞனாக வருவான்!
உடனே, இனி
“இவருக்குப் பதில் இவர்” என
படம்போட்டு விளக்குவார்கள்!
தொடர்களை விடவும்,
முடிவற்றுத் தொடர்வது-
இந்த-
“இவருக்குப் பதிலாக இவர்”
என்னும் தொடர்தான்
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இப்போது எதிர்பார்ப்பது-
“இவருக்குப் பதிலாக இவர்” எனும்
ஆளுநர் மாற்றத்தைத் தான்.
இது மாறாவிட்டால்
உச்சியில் மாற்றம்
நிச்சயம் நிகழும்.