tamilnadu

img

விவசாயிகள் கோரிக்கைகளுக்காக தில்லியில் ஒன்றுபட்ட போராட்டம்

கே.வரதராசன் நகர் (திருச்சூர்), டிச.13- விளைபொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், மின்சாரச் சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட ஒன்றிய அரசால் தீர்வு காணப்படாத பிரச்சனைகள் ஏராளம் உள்ளன. அவற்றை முன்னிறுத்தி விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக தில்லியில் நடத்த உள்ளதாக ஹன்னன்முல்லா தெரிவித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு துவங்கி யதையொட்டி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா செவ்வாயன்று (டிச.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், “தேசிய அளவில் ஒன்றுபட்ட போராட்டம் நடத்தப்படும்போதே மாநில அளவிலான போராட்டங்களும் வலுப்படுத்தப்படும். தில்லியில் நடக்கும் போராட்டம் பட்ஜெட்டையொட்டிய குறுகிய கால போராட்டமாக இருக்கும்.

அதே நேரத்தில் படிப்படியாக நீடித்த போராட்டம் நடத்தவும் திட்டமிடலாம் என கருதுகிறோம். இது எங்களது யோசனை. இதுகுறித்து இதர விவசாயிகள் சங்கத்தினரோடு விவாதித்து முடிவெடுப்போம்” என்றார். “அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் திருச்சூர் மாநாடு, மாநில அள வில் ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு  திரட்டுவது என்பது குறித்து திட்டமிடும். மாநில அளவிலான கோரிக்கைகளை ஏற்கனவே நவம்பர் 25 ஆம் தேதி அனைத்து ஆளுநர்களுக்கும் கொடுத்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அளித்துள்ள மனுக்கள் குடியரசுத் தலைவ ரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டி ருக்கும் என நம்புகிறோம். இந்த மனுக்கள் மீது ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராடு வதை தவிர வேறு வழியில்லை. இந்த அடிப்படையில் அனைத்து அமைப்புகளும் களமிறங்கும்” என்றும்  அவர் கூறினார். மேலும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) என்பது ஒரு சங்கம் அல்ல. பல்வேறு சங்கங்களின் ஒன்றுபட்ட மேடை.  ஒவ்வொரு அமைப்புக்கும் அவர்களுக்கான செயல்திட்டங்கள் உண்டு. அதன்படி அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனக்கான வேலைத்திட்டத்தை செயல்படுத்தும். அதே நேரத்தில் பிரச்சனை அடிப்படையில் ஒன்றுபட்ட இயக்கம் நடத்தப்படும் என்றும் ஹன்னன் முல்லா கூறினார்.

திக்காயத் பங்கேற்பு

திருச்சூர் மாநாட்டில் செவ்வாயன்று மாலை ராகேஷ் சிங் திக்காயத் உட்பட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் தலை வர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த டியூஐ (டிரேடு யூனியன் இன்டர்நேசனல்) அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் (கிறிஸ்டியன் அலியாமி மற்றும் மரியா டி ரோச்சா) அவர்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதிநிதிகளாக உள்ள பிரான்சை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் டியூஐ அமைப்பில் உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணை ந்துள்ளன. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் ஹன்னன் முல்லா கூறினார்.