tamilnadu

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை, ஏப்.19- மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்தனர்.மதுரை சித்திரை பெருந்திருவிழாவை யொட்டி கடந்த 7 ஆம் தேதி மாலை தங்க பல்லக்கில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார்.பின்னர் வியாழன் அதிகாலை சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக வந்த கள்ளழகர், மூன்று மாவடி, புதூரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தல்லாகுளம் வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அழகரை வணங்கி வரவேற்றார்கள்.தொடர்ந்து வழிநெடுக உள்ள மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகர் வியாழன் தல்லாகுளம் பெருமாள் கோவி லில் திருமஞ்சணமானார். அப்போது சூடிக் கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெற்றது.சித்ரா பெளர்ணமியான வெள்ளி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர்எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாது காப்புப் பணியில் 2 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

;