மதுரையில் அரசுப் பேருந்தில் இலவச பயணச் சீட்டில் பயணம் செய்த பெண் பயணிகளை இழிவுபடுத்திய ஓட்டுநர் காட்டுராஜா, நடத்துநர் அழகுபாண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்த பொன்னுத்தாய் மற்றும் தோழர்கள் மீதே சமயநல்லூர் காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இதைக் கண்டித்தும், பெண் பயணிகளை இழிவுபடுத்திய ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.