tamilnadu

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு இன்று பேச்சு

சென்னை,டிச.28- அரசுப் போக்குவரத்துக் கழக பணி யாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு போடப்பட வேண்டிய 14-வது  ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால்தாமதம் ஆகியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த 14-வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை புதனன்று (டிச.29) நடை பெறுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில்,   காலை 11 மணிக்கு, குரோம்பேட்டை, மாநகர்  போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற  உள்ளது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், நிதித்துறை இணைச் செயலாளர் ஜி.கே.அருண் தயாளன், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர், துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட  65 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதி கள்  பங்கேற்கின்றனர்.