tamilnadu

அரசு மருத்துவர் முதுகலைப் படிப்பில் ஊக்க மதிப்பெண் வழங்கலாம்: நீதிமன்றம்

சென்னை,ஜன.19- சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுசாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்து வர்களுக்கு எம்.டி., எம்.எஸ்.,  முதுகலை மருத்துவப் படிப்பில்  50 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் 30 விழுக்காடு ஊக்கத் தொகை மதிப்பெண் வழங்கப் படும் என 2021, அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள  முதுகலை மருத்துவப் படிப்பில்  1,968 இடங்கள் உள்ளன. இதில்  50 விழுக்காடு அகில இந்திய இட  ஒதுக்கீடு போக மீதம் 969 இடங்கள் இருக்கும். அதில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50  விழுக்காடு இடங்களும் அரசு  மருத்துவர்களுக்கே சென்றடைவ தற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்து வமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது.

எனவே இதில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று கோரி யிருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், “ஊக்க மதிப்பெண்ணைத் தகுதியாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரி வதால்தான் பொதுமக்கள் பயன் அடைகின்றனர். எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுகலைப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டு சலுகைகள் வழங்க எந்தத் தடை யும் இல்லை எனக் கூறி, இந்தச் சலுகையில் ஏதாவது ஒன்றை மட்டுமே தர உத்தரவிடக் கோரிய  மனுவைத் தள்ளுபடி செய்தார்.  பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்கவும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித் துள்ளார்.