பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக. 21- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தஞ்சையில் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மண்டல தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் கழகம் சார்பில், தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாரி, பொருளாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் துணைத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை வெளியிட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வழங்கப்படாத பேராசிரியர் பணி மேம்பாடு ஊதியம் உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தஞ்சை மண்டலத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.