tamilnadu

கடற்கரைக்குப் போய் வருவாய்... - கோவி.பால.முருகு

கடற்கரைக்குப் போய்வருவாய் கண்ணே-அங்கே
 கடலலைகள் பேசவரும் பெண்ணே!
உடம்பெல்லாம் சிலிர்த்துநிற்கும் கண்ணே-அதன்
 உருவத்தைப் பார்த்தபின்பு பெண்ணே!

கரையினிலே கிளிஞ்சல்களைத் தேடு-அதைக்
 கையெடுத்து மகிழ்ந்துமனம் ஆடு!
கரைதொட்டு பின்வாங்கும் அலைகள்-அதைப்
 காணுகின்ற காட்சிதரும் கலைகள்!

எல்லையிலா செல்வத்தைக் கொடுக்கும்-அதை
 எடுத்தாலும் குறையாமல் இருக்கும்!
மலைமுகட்டில் தோன்றுகின்ற ஆறு-கடல்
‌ மடியினிலே சங்கமிக்கும் பாரு!

முத்துக்களை அள்ளித்தரும் சிப்பி-கடல்
 மூழ்கியதைக் கொண்டுவரும் சிற்பி!
சொத்தாகும் பவளக்கொடி உண்டு-அதைச்
 சூழ்ந்திருக்கும் பாறைகளைக் கண்டு!

தூரத்தில் படகுகளும் ஆடும்-அங்கே
 துள்ளுகின்ற மீனையள்ளத் தேடும்! 
ஓரத்தில் நின்றுகடல் பார்ப்பாய்-அதன்
 உள்ளே செல்லாமல் நிற்பாய்! 

கடல்தானே உலகத்தின் செல்வம்-அது
 கணக்கற்ற ஏழைகளின் உள்ளம்!
கடல்வளத்தைச் சுரண்டவரும் கூட்டம்-அது
 கண்மறைந்து ஓடவேண்டும் ஓட்டம்!