ருத்ராபூர், மே 5 - உத்தரகண்ட் மாநிலம், ருத்ராபூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு, இந்து சகோதரிகள் தங்களுக்குச் சொந்த மான 20 ஆயிரத்து 424 சதுர அடி நிலத்தை (சுமார் 50 செண்ட்) தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபூர் அருகே பெயில்ஜூடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. இவர் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடியவர். இவரது நிலத்தின் ஒரு பகுதி, முஸ்லிம்களின் பள்ளிவாசல் மைதா னத்தை ஒட்டி இருந்துள்ளது. அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்புடையவராக இருந்த பிரிஜ்நந்தன் பிரசாத், பள்ளி வாசலையொட்டி இருந்த தனது நிலத்தை, முஸ்லிம்களுக்கே தானமாக வழங்குவதென முடிவு செய்தார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே கடந்த 2003-ஆம் ஆண்டு பிரிஜ்நந்தன் பிரசாத் இறந்து போனார். அவரது நிலத்தையும் அவரது மகன் மற்றும் மகள்கள் பிரித்துக் கொண்டனர். இவர்களில் சரோஜ் உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரிலும், அனிதா தில்லியிலும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இதனிடையே, தந்தை பிரிஜ்நந்தன் பிரசாத் தனது நிலத்தை பள்ளிவாசலுக்கு தானம் அளிக்க விரும்பியது அண்மையில்தான், அவரது மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தங்களது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுசெய்த மகள்கள் சரோஜ், அனிதா ஆகிய இரு வரும், தந்தை இறந்து 19 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஜாஸ்பூருக்கு வந்தனர். இங்கு வருவாய் அதிகாரிகள் முன்னி லையில் உரிய நடைமுறைகளுக்குப் பின் 20 ஆயிரத்து 424 சதுரஅடி நிலத்தை காஷிபூர் பள்ளிவாசல் குழுத் தலைவரைத் தொடர்பு கொண்டு பள்ளிவாசல் தொழுகைக்காக தானமாக வழங்கினர்.
இந்து சகோதரிகள் தானமாக வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 50 லட்சம் ஆகும் என்ற நிலையில், இது பெயில்ஜூடி கிராம முஸ்லிம்களை மிகுந்த நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிவாசல் தலைவர் ஹசீன்கான் இந்த தானம் குறித்து கூறுகையில், “இந்து சகோதரிகள் இறந்துபோன தங்களது தந்தை யின் விருப்பத்திற்கு இணங்க நிலத்தை தான மாக வழங்கியுள்ளனர். நாங்கள் தற்போது அந்த நிலத்தில் எல்லைச் சுவர் கட்டத் தொடங்கியுள்ளோம். நம் நாடு வகுப்புவாத வெறித்தனத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையில் இந்த சகோதரிகளின் அன்பளிப்பு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த இடத்தில் தங்களது தந்தையின் பெயர் பொறிக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். பெயில்ஜூடி கிராமத்தில் தேலா ஆற்றுப் பாலம் அருகே மசூதியை ஒட்டி, தொழுகை நடத்தும் மைதானம் (ஈத்கா) 4 ஏக்கரில் உள்ளது. இங்கு ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் முஸ்லிம்கள் சுமார் 20 ஆயிரம் பேர் வரை தொழுகையில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.