கெயில் எரிவாயு குழாயில் வாயு கசிந்து தீப்பிடித்தது
கிருஷ்ணகிரி, மே 31- கேரள மாநிலத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக, கர்நாடகா மாநில தேவனகுந்தி பகுதி சிக்கசந்திரா வரை, 334 கிலோமீட்டர் தூரம் கெயில் நிறுவன எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. சிக்கசந்திராவில் இருந்து ஓசூர் வரை எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு, சிப்காட்டில் உள்ள கார்போரண்டம் என்ற தனியார் தொழிற்சாலைக்கு 2021 ஏப்ரல் முதல் குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே மின்வாரிய அலுவலகத்தை ஒட்டியுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையோரம் 2 மீட்டர் ஆழத்தில் எரிவாயு குழாய் செல்கிறது. இதில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய துவங்கியது. ஓசூர் தீயணைப்பு துறையினர், மண்ணை கொட்டி கட்டுப்படுத்த முயன்றும் தீ அணையவில்லை. கெயில் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது.அதன் பிறகு தீ எரிவது குறைந்து இரவு 8 மணிக்கு மேல் கட்டுக்குள் வந்து முற்றிலும் அணைக்கப்பட்டது. அதனால் பெரிய விபத்து ஏற்படாத படி தீயணைப்புத் துறையினர் பார்த்துக் கொண்டனர். கெயில் நிறுவனத்தினர் சேத மடைந்த குழாய்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து கூறுகையில் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள எரிவாயு குழாய் அவ்வளவு எளிதாக சேதமாக வாய்ப்பில்லை. நாசவேலை காரணமா என விசாரிக்க,சிப்காட் காவல் துறையில் புகார் செய்ய உள்ளோம் எனக் கூறினர்.