தஞ்சாவூர், ஜுன் 19- தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டிஎன்பிஎஸ்சி & டிஎன்யுஎஸ்ஆர்பி (காவல்துறை) போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் டிஎன்யுஎஸ்ஆர்பி எஸ்ஐ ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான அறிவிக்கை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டு, தேர்வு 12.07.2025 அன்று நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வு, தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஜுன் 21, 28 மற்றும் ஜூலை 5 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான, மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜுன் 20-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.