திருவனந்தபுரம், ஜுன் 1- கேரளத்தில் 4 லட்சம் மாணவர்களை முதல் வகுப்பிற்கு வரவேற்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் புதனன்று (ஜுன் 1) மீண்டும் திறக்கப்பட்டன. கோவிட் பெருந்தொற்று-முடக்க காலத்திலும் கேரள மாணவர்களின் கல்வி தடைபடாமல் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை நடத்தியதுடன். பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வழக்கம்போல் ஜுன் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான பள்ளி நுழைவு விழா கழக்கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். பள்ளிகள் திறப்புக்கு முன்னதாக பள்ளி கட்டடங்கள் ஓவியங்களால் மனதைக் கவரும் வகையில் புத்துயிர் அளிக்கப்பட்டன. கேரளத்தில் 42.9 லட்சம் மாணவர்களும், 1.8 லட்சம் ஆசிரியர்களும், கால் லட்சம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கோடை விடுமுறைக்கு பிறகு புதனன்று பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். தற்போதைய கோவிட் கட்டுப்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் பின்பற்றுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முதல் தொகுதிக்கான பாடப்புத்தகங்கள், கைத்தறி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு அருகில் போக்குவரத்து எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுக்கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார்.