சென்னை, ஏப். 9 - பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறை 778 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி யாண்டிற்கான அறிவிப்புகளை சனிக்கிழ மையன்று (ஏப்.9) சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா வெளியிட்டார். அதில், பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்டிடம் கட்டவும், சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக சானிடரி நாப்கின், சீருடைகள் வழங்குவதற்கு ரூ. 91.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 25 சென்னைப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி மேலும் விரிவுப்படுத்தப்படும் என்றும் பாலின பாகுபாட்டை தவிர்க்க பாலின குழுக்கள் அமைக்கப்படும் எனவும் மேயர் பிரியா அறிவித்தார்.
தனியார்மயம்
மாநகராட்சியில் 722 பூங்காக்களில் 111 தனியார் மூலம் பராமரிக்கப் படுகிற நிலையில், எஞ்சியுள்ள 611 பூங்காக்கள், 220 விளையாட்டு திடல்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படும். இதற்காக 16.35 கோடி ரூபாயும், 10 மண்டலங்களில் உள்ள தெருவிளக்குகள் தனியார் மூலம் பராமரிக்க 22 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டு நிதி உயர்வு
மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்ட நிதி 30 லட்சத்தி லிருந்து 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.70 கோடியும், மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது.
ரூ.148 கோடி வட்டி
இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை, வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் தாக்கல் செய்தார். அதில், வருவாய் வரவு 2,824.77 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவு 3,613.35 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதனால் வருவாய் பற்றாக்குறை 788.58 கோடி ரூபாயாக இருக்கும். மூலதன வரவு 2,528.80 கோடி ரூபாயாகவும், மூலதனச் செலவு 2,510.24 கோடி ரூபாயாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி ரூ.800 கோடி, தொழில் வரி ரூ.475 கோடி, முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி ரூ.170 கோடி, மாநில நிதிக்குழு மானியம் ரூ.500 கோடி, இதர வருவாயாக ரூ.879.77 கோடி என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ரூ.1837 கோடி, நிர்வாக செலவினங்கள் ரூ.121 கோடி, பழுதுபார்த்தல், பராமரிப்பு ரூ.1079 கோடி, கடனுக்கான வட்டி செலுத்த ரூ.148 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதன செலவை பொருத்தவரை பேருந்து சாலைகள் சீரமைத்தல், மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் ஆகியவற்றிற்காக ரூ.1492 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.