சிவகங்கை,ஜன.28- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த 715 விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும். மின்துறையை தனியாரிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்த அகில இந்திய அளவிலான ஐக்கிய முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்கா தொடங்கி அரண்மனை வாசல் வரை திரளான விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இப்பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முத்துராமு தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி ,மாவட்ட செயலா ளர் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கண்ணகி , காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.