tamilnadu

உலகச் செய்திகள்

சீனாவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் அரசு ரீதியிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை இரு நாடுகளும் கொண்டாடுகிறார்கள். இதற்காகப் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெக்சிகோவில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளில் சீன தூதரக அதிகாரிகள், மெக்சிகோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகிறார்கள். பரஸ்பர நம்பிக்கையுடனான இந்த உறவைத் தொடர்ந்து அங்கீகரிப்பதாக இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.

பிற நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்க வியட்நாம் தயாராகி வருகிறது. 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து வியட்நாமுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசியை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். பிரதமர் வு டக் டேம் தலைமையில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சொந்தமாக ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் சையது ஹசன் நஸ்ரல்லா அறிவித்துள்ளார். இந்த ராக்கெட்டுகளை துல்லியத்துடன் இயங்கும் ஏவுகணைகளாக மாற்றும் சக்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே துவங்கி விட்டதாகவும், ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.