tamilnadu

img

நெல் கொள்முதலை தனியாரிடம் தராதீர்!

மதுரை, செப்.01- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தனியார்மய எதிர்ப்பு இயக்க ஆயத்த தென்மண்டல  சிறப்பு ஊழியர்  பேரவை  ஆகஸ்ட் 30 அன்று மதுரையில் நடைபெற்றது. சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி,  ஏஐசி சிடியு உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வி.ஆர். கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்ற பேரவைக்கு ஐஎன்டியுசி பொதுச் செயலாளர்  கே.இளவரி தலைமை வகித்தார்.  ஐஎன்டியுசி பி.மோண்டி அம்பலம், ஏஐசிசிடியு  எல்.மரியராஜ், என் கந்தசாமி, சிஐடியு ஏ.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர் பொருள் வாணிபக் கழக ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், மாநிலச் செயலாளர் கே.கதிரேசபாண்டியன், மாநிலத் துணைப்பொதுச்செயலாளர்கள் கே.சண்முகம், கே.சுப்புராஜ், மதுரை மண்டல செயற்குழு உறுப்பினர் ஜி.தியாக ராஜன், ஏஐடியுசி மாநில நிர்வாகி சி.சந்திர குமார், ஏஐசிசிடியு மாநில நிர்வாகிகள் த.சங்கரபாண்டியன் ஆகியோர் பேசினர்.

சிஐடியு மண்டல செயலாளர் எம்.அழகுலட்சுமணன் நன்றி கூறினார். சுமை தூக்குவோர் பணியை டெண்டர் விடக்கூடாது. சுமை தூக்குவோர்க்கு 2022இல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை எப்சிஐ தொழிலாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும்.   நெல்கொள்முதலை, நவீன அரிசி ஆலையை  தனியார்க்கு தாரை வார்க்கும் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் நியாய விலைக்கடைகளை கூட்டுறவுக்கு மாற்றக்கூடாது. அனைத்து நியாயவிலைக் கடைகளை யும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே ஏற்று நடத்திடவேண்டும்.  கூட்டுறவு துறை அதிகாரிகளின் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்  கழகத்தின் நிறுவன பணி நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரவை நடைபெற்றது.